சாவகச்சேரி சம்பவ விசாரணை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு-
சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின்கீழ் பயங்கரவாத புலானய்வுப் பிரிவினரால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர கூறியுள்ளார். கைதான சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார். அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின்; போதெல்லாம், மனைவி கோபித்துத்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிடுவதாகவும் தெரியவருகின்றது. மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. இவ்வாறு மீட்கப்பட்ட தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும், அவ்வளவு பழையன இல்லை என்றும் பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர், தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்துகொண்டார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதேவேளை முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் சந்தேகநபர் விசாரணையின்போது கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு-
மன்னார், இலுப்பைக்கடவை பகுதியில் நேற்றுமாலை ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியொன்றிலுள்ள பாழடைந்த மலசலக்கூட குழியொன்றினுள் இருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்கள் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மலசலக்கூட குழியிலிருந்து ஆயுதங்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 14 மிதிவெடிகள், 21 வௌ;வேறு ரக குண்டுகள் ஆர்.பீ.ஜீ. உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடி பொருட்கள் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.