மன்னார் – பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம், இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம், இன்றுகாலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது, தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த கல்வி நிலையப் பகுதிக்குச் சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்து குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பறை கூடம் மீது வீசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இன்போது, தீ ஏற்பட்டு குறித்த வகுப்பறையின் உள்ளக பகுதிகளில் மரத்தினாலான பகுதிகள் எறிந்துள்ளது. உறுகிய நிலையில் இரண்டு பிளாஸ்ரிக் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் சேவை 119 அழைப்பை ஏற்படுத்திய போதும், அவர்கள் உரிய நேரத்துக்கு வரவில்லை என குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிராம அலுவலகர்களும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலமையை அவதானித்தனர். அண்மைக் காலங்களாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு இடையில் தொடர்போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.