2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 70 புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு தேர்தலின் ஊடாக 196 உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் 29 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டங்களில் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும்.

அத்துடன் மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஏப்ரல் 23 முதல் மே 6ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. 19வது திருத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. எவ்வாறாயினும் கடந்த 20ம் திகதி நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் எதிர்வரும் மார்ச்; 3ம் திகதிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மூன்றாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.