வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைக்குண்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களை பின்தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற நபர்கள் அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகளை அறுத்து சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்து கைக்குண்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளையும் மீட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 9 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.