நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்த்தினால்  மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் சில தகவல்களை வெளிவிடுவதற்கு அஞ்சுகின்றது என்றும்  ஆணைக்குழு சேகரித்த அனைத்து தகவல்களையும் ஆணைக்குழு தெரிவித்துள்ளவாறே வெளியிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆணைக்குழு தெரிவித்துள்ள விடயங்களில் எவற்றையும் மறைக்க முடியாது அல்லது தெரிவு செய்த சில விடயங்களை மாத்திரம் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அச்சிட்டு வெளியிடுவது பெரிய விடயமல்ல என்றும் முதுகெலும்புள்ள தலைவர்களே எங்களுக்கு அவசியம் என்றும் தெரிவித்துள்ள அவர், இந்தத் தேவாலயத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல், தங்கள் தலையைக் கவிழ்க்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்று அலட்சியமாக இருந்தால், தாங்கள் தங்களின் வழிமுறைகளைப் பின்பற்றவுள்ளதாகவும் சர்வதேச கத்தோலிக்க திருச்சபைக்குச் சென்று போராடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.