ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அந்நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
இது தொடர்பில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,
“அன்புள்ள உக்ரேனிய குடிமக்களே, இன்று காலை ரஷ்ய ஜனாதிபதி புடின் இராணுவ நடவடிக்கையை அறிவித்தார். நமது இராணுவ உட்கட்டமைப்பு மற்றும் எல்லைக் காவலர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
உக்ரைனின் பல நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதையடுத்து எங்கள் நாட்டின் முழுப் பகுதியிலும் நாங்கள் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
“ஒரு நிமிடத்திற்கு முன்பு நான் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் உரையாடினேன். அமெரிக்கா ஏற்கனவே சர்வதேச ஆதரவை ஒன்றிணைக்கத் தொடங்கியுள்ளது.
இன்று நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்க வேண்டும். முடிந்தால் வீட்டிலேயே இருங்கள்.
நாங்கள் உங்களுக்காக வேலை செய்கின்றோம். இராணுவமும் செயல்படுகிறது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை முழுவதுமாக செயல்பட்டு வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
“பதற்றம் வேண்டாம். நாங்கள் பலமாக இருக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் உக்ரைன் என்பதால் அனைவரையும் வெல்வோம்.” என்றார்.
இதேவேளை, உக்ரேன் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தலைநகரில் உள்ள இராணுவக் கிடங்குகள் மற்றும் விமானநிலையங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன.
மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு உக்ரேனுக்கு இராணுவ தாக்குதலை அறிவித்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். சில நிமிடங்களுக்குப் பிறகு உக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல் தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, தலைநகர் கீவ்வில், அவசரக்கால சைரன் ஒலிக்கப்பட்டது. மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறும் போது கார்களின் வரிசை அதிவேக நெடுஞ்சாலையை அடைத்திருப்பதைப் படங்கள் காட்டுகின்றன.
சமூக ஊடகங்களில் அங்கு ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வு பற்றி பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. சிலர் தாங்கள் கூடாரங்களுக்கும் அடித்தளங்களுக்கும் விரைந்ததாகக் கூறுகின்றனர்.
மக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை சர்வதேச தொலைகாட்சிகளில் ஒளிபரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.
கீவ்வில் உள்ள கார்டியன் பத்திரிகையின் செய்தியாளர் லூக் ஹார்டிங், ட்விட்டரில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்பதாகக் கூறியுள்ளார்.