தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குக் கால அவகாசத்தை வழங்கிப் பார்க்க வேண்டும் என தெரிவிக்கும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பயங்கரவாதச் செயற்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபட்டால் எந்நேரத்திலும் மீள தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், பயங்கரவாத அமைப்புகள் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடை செய்யப்பட்ட அமைப்புகள், சட்டரீதியாக தங்களை பயங்கரவாதிகள் இல்லை என நிரூபித்து தடைகளை அகற்றிக்கொண்டால் அதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்றே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. குறைந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களையாவது அவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

எவ்வாறாயினும் தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் பயங்கராதச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாக இருந்தால் அந்த அமைப்புகள் மீது மீள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.