உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்று(15) முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிதி கிடைக்காமை காரணமாக தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதில் தடைகள் ஏற்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சகம் என்பன கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிந்தையவை

நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் அழைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதனிடையே, அரச அச்சகருடனும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு உட்பட்ட விடயம் என்பதால் வாக்குச்சீட்டுகளை உடனடியாக ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கான பொறுப்பு தொடர்பில் அரச அச்சகருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.