வட மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான குழு  யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு கடந்த 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த குழுவில் மனித உரிமைககள் ஆணையாளர் அனுஷ்யா சண்முகநாதன் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

01. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தொண்டு நிறுவனத்தை ஸ்தாபித்தல்

02. போதைப்பொருள் கடத்தல், கடல் மார்க்கமாக இடம்பெறும் கடத்தல்கள், வட மாகாணத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் வீதி சோதனை நடவடிக்கைகள் – சோதனைச் சாவடி செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்தல்

03. உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தல், நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்தல்

என்பன தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், வட மாகாண அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்ட மற்றும் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சந்தித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆராய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.