பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் பூசா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பல நிபந்தனைகளின் அடிப்படையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு  நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 21 பேரையும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.