அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்திச் செயற்பாடுகளை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இந்த துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.