ஹலால் சான்றிதழை முழுமையாக நீக்காவிடின் போராட்டம்-

பொதுபல சேனா- ஹலால் இலட்சனைகள் பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்னும் விற்பனை நிலையங்களில் உள்ளன. எனவே அவற்றை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிடின் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்கும் என பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தாம் நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும். அவர் குறிப்பிட்டுள்ளார். ஹலால் சான்றிழை நிறுத்த வேண்டும் என கோரி நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளும் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை நீக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள் குழு இலங்கைக்கு விஜயம்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அழைப்பின் கீழ் தமிழக மீனவர்கள் 19பேரடங்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது, இக்குழுவினர் அவரை சந்தித்திருந்தனர். இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டே அவர்கள் இலங்கை வருகின்றனர். இந்த விஜயத்தின்போது, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் மீனவர் சமாயங்களுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதேவேளை தமிழக மீனவர்களால் முன்வைக்கப்படுகின்ற எந்த தீர்வினையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும், இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க ஏற்பாடு-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தை தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்ற தெரிவிக்கப்படுகிறது. அவரது பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 24வது மனித உரிமைகள் மாநாடு செப்டம்பர் மாதம் 9ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. எனினும் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதுடன், ஆகஸ்ட் 31ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் அவர் இலங்கையின் அரசியல், அபிவிருத்தி, மீளமைப்பு, மனித உரிமை விடயங்கள் குறித்த முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை தயார்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை 24வது மனித உரிமைகள் மாநாட்டில் அவரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மரணதண்டனை கைதிகளுக்கு நிவாரணம்-

மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ள மற்றும் ஆயுட்கால சிறை தண்டனையை பெற்றுள்ள கைதிகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வற்கு குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களிள் பங்களிப்புடன் இக்குழு நியமிக்கப்பட உள்ளதாக, அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு உட்பட்டுள்ள 350யிற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இந் நிலையில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இது தொடர்பான அறிக்கை நீதியமைச்சுக்கு அனுப்பப்பட்டு, இந்த குழு அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்ரசிறி கஜதீர ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

கைதான இலங்கையர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தபோது சர்வதேச கடற்பரப்பில்  நிர்க்கதியான நிலையில் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த குழுவினர் காலி மேலதிக நீதவான் குனேந்திர குமார முனசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நாளைய தினம்வரையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினரில் 46 ஆண்களும் 10 பெண்களும் 17 சிறார்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கடற்படை வழங்கிய தகவலுக்கு அமைய வர்த்தக கப்பலொன்றின் ஊடாக இக் குழுவினர் சுமார் 290 கடல் மைல் தொலைவில் காப்பாற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக கடலில் நகர வளாகம்-

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி ‘நகர வளாகம்’ ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 230 ஹெட்ரேயரில் நகரத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையிலேயே இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 17,920 கோடி ரூபா செலவிலேயே இந்த நகர வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. புதிய கொழும்பு தெற்கு துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள 230 ஹெக்ரேயர் நிலப்பரப்பரப்பை துறைமுக அதிகாரசபை மீளப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக துறைமுக அதிகார சபை தலைவர் பிரியாத் பண்டு விக்ரம தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளர்மீது தாக்குதல்-

யாழில் ஊடகவியலாளர் ஓருவர்மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுயாதீன ஊடகவியலாளரான சி.மயூதரன் (வயது26) என்ற ஊடகவியலாளர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் சி.சிவதாஸ் (வயது28) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை 5.30 மணியளவில் திருநெல்வேலி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் குறித்த ஊடகவியலாளர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளைவானில் வந்த இனம்தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் உடன் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டனர். அதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளனர.

தேர்தல் சட்டங்களை மீறி சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்-

வட மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படவுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறி சுமார் 500 சிங்கள குடும்பங்களை பயிர்ச்செய்கைக்கான காணி உட்பட வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான காணியையும் வட மாகாணத்தில் வழங்குவதாக சிங்கள ஊடகச் செய்தியொன்று தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிரந்தரமாக குடியிருக்காத சிங்களக் குடும்பங்களை இவ்வாறு பதவிய, பராக்கிரமபுர, ஹொரவப்பொத்தான பிரதேசங்களின் எல்லைகளில் குடியேற்றி வருவதாக அதில் கூறப்பட்டு;ள்ளது. அங்கு இராணுவத்தின் சிங்க படையணியால் இக்குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளும் வீடுகளும் நிர்மாணித்துக் கொள்வதற்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.