Header image alt text

News

Posted by plotenewseditor on 11 June 2013
Posted in செய்திகள் 

11.06.2013
 
ஜாதிக ஹெல உறுமைய – ஜனாதிபதி சந்திப்பு-

Jathika Hela Urumaya13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாணசபை அமைக்கப்படும் முன்னர் யாப்பிற்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமானவை என ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்த 5 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட 5 விடயங்களில் 2 ஐ, அமைச்சரவைக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெறும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய செயற்பட வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியினை ஜனாதிபதி கைவிடவேண்டும்: சம்பந்தன்-

imagesCAL8QU13ஜாதிக ஹெல உறுமய,தேசிய சுதந்திர முன்னணிஆகியவற்றின் கோரிக்கைகளுக்கிணங்க  13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினை ஒழிப்பதற்கு அல்லது அர்த்தமில்லாத பெறுமதியற்ற பிரயோசனமில்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முயற்சியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைவிடவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சிகளும் கோரிக்கை விடுக்கவில்லை. இந்தக் கட்சியினருக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும். இந்த நடவடிக்கையினை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த முயற்சியினை கைவிடுவது நாட்டுக்கும் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நன்மையான முடிவாக அமையும் என்று இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 
 13ஐ திருத்தும் விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிடவுள்ளோம்-

அமைச்சர் திஸ்ஸ விதாரண- அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கொண்டுவரவுள்ள இரண்டு திருத்தங்கள் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எமது கட்சியின் அதிருப்தியை வெளியிடவுள்ளோம் என்று ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அந்த விடயம் தற்போது வலுவிழந்துள்ளது. எவ்வாறெனினும்; 13ஆவது திருத்தத்தில் அதிகாரக்குறைப்பு செய்வது சரியாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் நோக்கிலும் மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்ற பிரிவை 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கவும் அரசாங்கம் அவசர சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளது. இது தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரக் குறைப்புக்களை செய்வது சரியாக அமையாது. எனவே அந்த திருத்த யோசனை தொடர்பில் எமது அதிருப்தியை நாங்கள் வெளியிடவுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தீர்மானம்- பவ்ரல்-

வட மாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வட மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்களுடைய குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேரை வரவழைக்கவிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் வடமாகாணத்திலேயே கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு-

சீரற்ற காலநிலை காரணமாக பலியான மீனவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. காலி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மேலும் 30 மீனர்களை காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் வான்படையினரும் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை தொழிலுக்காக சென்ற 5 மீனவர்களை காணவில்லை என்று கன்னியாகுமரி மீனவ சங்க அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் அறியும் பட்சத்தில் தமக்கு அறியத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 பிரதி பொலீஸ்மா அதிபர் கைது-

மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, இரகசிய பொலீசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் இரகசிய பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, பொலீஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 6ஆம் திகதி பிரதி பொலீஸ் அதிபர் வாஸ் குணவர்தன, இரகசிய பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். கடந்த மாதம் 22ஆம் திகதி பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்

News

Posted by plotenewseditor on 10 June 2013
Posted in செய்திகள் 

10.06.2013

ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவில்லை-

JVPஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையானது பௌத்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவளிக்காது. மாறாக தேசியளவில் புதிய அரசியல் அமைப்பொன்றுக்கான தேவை காணப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியல் அமைப்பு நிறுவப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது தற்போதுள்ள அரசியலமைப்பில் சிறு சிறு திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாகாண சபை முறைமை மாற்றம் அடைய வேண்டுமென்று ஜே.வி.பி. வலியுறுத்துவது இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கொள்கைகளில் அல்ல. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவமான சந்தர்ப்பங்கள், சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என்பவை உரியவகையில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து இன மக்களுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் இன முரண்பாடுகளே தோன்றும். தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமையானது ஏற்றுக்கொள்ளும் விதத்திலோ அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலோ அமையவில்லை. எனவே, இம்முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. தொடர்ந்தும் உள்ளது என சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

 பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடத்தை வெளியிட வேண்டும்-மனித உரிமைக் கண்காணிப்பகம்-

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடம் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அண்மையில், எக்நெலிகொடவை தாம் பிரான்ஸில் சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். காணாமல் போன எக்நெலிகொட மற்றும் ஏனைய காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கண்காணிப்பகம் வலியுத்தியுள்ளது. சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் 5671பேர் பலவந்தமான முறையில் காணாமல் போயிருப்பதாக ஐ.நா புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன. 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13 பல்கலைக்கழகங்களை நிறுவ நடவடிக்கை-

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்வூட் அழகியற்கலை மையத்திலும் சபுகஸ்கந்த தொழில்பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவப்படவுள்ளன. ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரி நிறுவப்படவுள்ளது. அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியில் தேசத்திற்கு மகுட கண்காட்சிக்காக நிறுவப்பட்ட புதிய கட்டிடங்களில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக 09 பல்கலைக்கழக கல்லூரிகளை இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுரம், பொரல்ல, கட்டுபத்த மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டலஸ் அழக்பெரும அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
 
புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை-

swissபுகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விதிகளை சுவிட்ஸர்லாந்து கடுமையாக்கியுள்ளது. நாட்டிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் சுவிட்ஸர்லாந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் இராணுவத்தில் இருந்து வெளியேறியமை புகலிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நீண்டகால காரணமாக கருத முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு சுவிஸ் தூதரகத்தின் ஊடாக புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகலிடம் கோரி விண்ணபித்த சுமார் 48 ஆயிரம் வழக்குகள் சுவிட்ஸர்லாந்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டவர் கைது-

ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 7க்கும் மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ள இவர், பலரிடம் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி பணம் வசூலித்து வந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையிலான குழுவினரே இவரைக் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையைச் சேர்ந்த ஆதம்பாவா முகமது ஜிப்ரிஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் கூறுகின்றனர். 
 
கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீட்டின்மீது கைக்குண்டு தாக்குதல்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்முனைக்குடி மத்ரசா வீதியில் அமைந்துள்ள மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்வின் வீட்டின்மீது நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், வாசல் கதவு, சுவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலின் போது மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்ட கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை மாநகர சபையின் ஆளும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் மாநகர சபையின் அதிருப்திக்குழு அங்கத்தவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அம்பலாந்தொட கடற்பரப்பிலிருந்து 14 சடலங்கள் மீட்பு

சீரற்ற காலநிலை காரணமாக கடும் கற்காற்றில் சிக்குண்டு உயிரிழந்த 14 மீனவர்களது சடலங்கள் இன்று அம்பலாந்தொடவிலிருந்து கொஸ்கொட வரையான கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பலபிட்டிய வைத்தியசாலைக்கு நேற்று 12 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று 14 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதேவேளை சீரற்ற காலநிலையில் கடலிற்குச் சென்று விபத்தில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

indiaஇலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்புப் படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இவர்களின் போராட்டத்தின் போது நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு போகும் பாதைகள் பலமணி நேரம் தடைபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது

News

Posted by plotenewseditor on 9 June 2013
Posted in செய்திகள் 

வெற்றிபெறும் நோக்கிலேயே அரசு தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய முனைகிறது-மாவை சேனாதிராஜா எம்.பி.-

வட மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவசர அவசரமாக தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு வாக்காளர் பதிவு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரம் காட்டிவருவதற்குக் காரணம் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்பதற்காகவே என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முன்னேறிய நாடுகள் சிலவற்றில் அந்த நாட்டின் குடிகள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த மக்கள் தமது தாய்நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பது போல், இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் குடியுரிமை பெறாதவர்களும் நடைபெறவுள்ள வடக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை அந்த அந்த நாடுகளிலேயே, உண்டாக்கிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்-மாணிக்கம் தாகூர்-

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் பொஸ்டனில் இடம்பெற் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் 3 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். யுத்தம் நிறைவடைந்து 04வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாவே பார்க்கப்படுகின்றனர். யுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்கம் காட்டிய அவசரத்தை, தமிழர்களை மீள்குடியேற்றவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் காட்டவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காண்பதற்கு, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வது அடிப்படை உயிர் நாடியை அகற்றும் செயல்-அமைச்சர் ஹக்கீம்-

13ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டுவரவேண்டும் என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என நீதி அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இவ்விடயம் அணுகப்படுவதை என்னால் உணரமுடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி பொலீஸ் அதிகாரங்கள் மட்டுமன்றி எந்த வகையான குறைப்பையும் மேற்கொள்வதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போகாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கான வாக்காளர் பதிவேடுகளை பார்வையிட வசதி-

பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேடுகள் நாடு முழுவதுமுள்ள கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அரச பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு 5 ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேட்டு பிரதியைப் பெற்றுக்கொள்ளவென பெருந்தொகையானோர் தேர்தல் அலுவலகங்களுக்கு வருவதால் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. தத்தமது பிரதேச செயலகத்தில் அல்லது தத்தமது பிரிவு கிராமசேவகர் அலுவலகங்களில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.50 மணிமுதல் 12.00 மணிவரை இந்த பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்-அமைச்சர் நாராயணசாமி

13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக இந்தியாவின் திட்டக்குழு மற்றும் பாராளுமன்ற விவகார மத்திய இணையமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தொண்டமான் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோர் அண்மையில் சந்தித்தபோது வீ.நாராயணசாமியும் அதில் பங்கேற்றிருந்தார். 13ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் இந்தியா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது என இதன்போது கூறப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழப்பு-

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 18 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 24 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 36 மீனவர்களும், 37 படகுகளும் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை இன்றைய தினமும், மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியிலும், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பகுதியிலும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மீனவர்களுக்கு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து, 13பேர் உயிரிழப்பு-

இலங்கையர்களும் உள்ளடங்கியிருப்பதாக நம்பப்படும் அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடந்த புதன்கிழமை அன்று கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் 13 பேர் பலியானதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். மூழ்கிய படகில் 55 அகதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவுஸ்திரேலியாவின் மூன்று படகுகளும், மூன்று உலங்கு வானூர்திகளும் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் பலியான 13பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.  கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் 15 கப்பல்களும் 10 ஹெலிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள். அறிவித்துள்ளனர்.

வட மாகாணசபைத் தேர்தலுக்குத் தேர்தல் திணைக்களம் தயார்-

வட மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 07ஆம், 14ஆம் அல்லது 28ஆம் திகதிகளில் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தேர்தல்களை நடத்த மேலும் 21 நாட்கள் தேவைப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கு மனித உரிமைகள் தொடர்பில் விளக்கமளிப்பு-

மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் வட மாகாணத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரையான காலப்பகுதி வரையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் கடமையாற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தெளிவுபடுத்தப்படவுள்ளனர். பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கமென கூறப்படுகிறது.

News

Posted by plotenewseditor on 8 June 2013
Posted in செய்திகள் 

தமிழ் மக்களை வலுப்படுத்துமாறு இந்தியக்குழு வலியுறுத்தல்-

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துமாறு, இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுன்றக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தாம் நேற்று ஜனாதிபதி மகிந்த hஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, பாரதீய ஜனதா கட்சியின் பிரதித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் குழு நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளது. இதன்போது, யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழர்களின் இதயத்தை வெல்லக்கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியுள்ளார். இதற்காக வடக்கில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தல்களை நடத்துவதுடன், அதிகாரப்பகிர்வையும் வழங்கி, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

மீனவர்கள் கைதாகும் விடயத்திற்கு முடிவுகட்டுமாறு வலியுறுத்தல்-

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டுமாறு, தி.மு.க தலைவர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதும், மத்திய அரசு இன்னமும் மௌனமாகத்தான் இருக்கிறது. இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த விதமான வினைத்திறனான நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங்கினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுயாதீனக் குழுக்களை நியமிக்குமாறு கோரிக்கை-

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக 17ம் அரசியல் திருத்தத்தின் கீழுள்ள சுயாதீன குழுக்களை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்றையதினம் கொழும்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறு சுயாதீனக் குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு, அதன் தலைமைத்துவத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவுறுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா தீர்ப்பாயத்தின் இலங்கை நீதிபதி பதவி விலகல்-

சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடற்பிராந்திய பிரச்சினை தொடர்பான ஐ.நாவின் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் குழுவிலிருந்த இலங்கை நீதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த பதவி விலகலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் இது தீர்ப்பாயத்தின் செயற்பாடுகளை பாதிக்காது என்று பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தினருக்கு சீனா பயிற்சி-

இலங்கை இராணுவத்தினருக்கு சீனா பயிற்சிகளை வழங்கவிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ தெரிவித்துள்ளார். இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் கடந்தவாரம் 2.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான உட்கட்டுமான வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே சீனா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கவிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

  இரத்தினபுரியில் மினி சூறாவளி-

இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை தொடர்ந்து வீசிய மினி சூறாவளி காற்றினால் இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சரிந்து விழந்தமையால் போக்குவத்து தடைப்பட்டிருப்பதாகவும் இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது. இரத்தினபுரியின் அனேக பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்து காணப்படுப்படுவதாகவும் அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும் தடைப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நீர்கொழும்பு மீனவர்கள் மீட்பு-

புயல் காற்றில் சிக்கியதில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பைச் சேர்ந்த அன்ரன் ராஜமணி (33 வயது) மற்றும் மனோஜ் (31 வயது) ஆகியோரே காப்பாற்ப்பட்ட மீனவர்களாவர். குறித்த மீனவர்கள் இருவரும் நேற்றுமாலை 5 மணியளவில் தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர். இரவு கரையிலிருந்து 5 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையில் கடும்காற்று காரணமாக இவர்களது படகு கவிழ்ந்துள்ளது. பாதுகாப்பு ஜாக்கட் அணிந்திருந்மையால் இருவரும் படகினை பிடித்தவாறு கரையை நோக்கி 2 கிலோமீற்றர் துரம் வரை வந்துள்ளனர். 

சீரற்ற காலநிலை: 2 மீனவர் பலி, 15 பேரைக் காணவில்லை-

காலி, பலப்பிட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவரின் சடலங்கள் கரையொங்கியுள்ளன. மேலும் மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களைக் காணவில்லையெனவும், 8 வெறும் படகுகள் மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாகவே படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் பின்னர் பலபிட்டிய கடல் பகுதியிலிருந்து 11மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் அப்பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு-

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பகுதியில் உயிருக்குப் போராடிய மீனவர்கள் மூவர் விமானப்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் காலி முகத்திடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை படகு மூழ்கியதன் காரணமாக பேருவளை கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாதிப்பு-

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீசிய பலமான காற்று காரணமாக விமானநிலையத்தினுள் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் பல விளம்பரப் பதாதைகளும் உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலும் இதன் காரணமாக சில விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யாழில் பஸ் விபத்தில் அறுவர் படுகாயம்-

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6பேர் படுகாயமைந்துள்ளனர். இந்த விபத்து, மிருசுவில் பகுதியில் இன்றுஅதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ். அரியாலையைச் சேர்ந்த குணசேகரப்பிள்ளை அருளினி (வயது 39) கணேஸ்வரன் வயது (வயது 45) பிரதீபா (வயது 30) அச்சுவேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் அஞ்குஜன் (வயது 22) இராசேந்திரம் றுசாந், ஜீவரத்தினம் (வயது 22) ஆர்னோல்ட் பிரசாத் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் சென்று கொண்டிருந்த பஸ்;சே பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் மிருசுவில் பகுதியில் வந்ததடைந்தபோது, பஸ்ஸின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பஸ்ஸை செலுத்தியதாகவும் இதன்போதே மேற்படி விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

News

Posted by plotenewseditor on 7 June 2013
Posted in செய்திகள் 

நெடுங்கேணி சிறுமியை பலாத்காரப்படுத்திய படைச்சிப்பாய் அடையாளம் காணப்பட்டார்-

வவுனியா நெடுங்கேணியில் 7வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை, பாதிக்கப்பட்ட சிறுமி இன்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி நெடுங்கேணி, சேனைப்பிலவில் பாடசாலை சென்று வீடு திரும்புவதற்கு காத்திருந்த இச்சிறுமி ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின் பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள பற்றைக்குள்ளிருந்து இந்தச் சிறுமி மீட்கப்பட்டிருந்தார். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் படைச்சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி இன்று வவுனியா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி அண்மையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா உதவி-

இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்கு உதவியளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொழும்பு பத்தரமுல்லயில் அமைந்துள்ள நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம் செய்துள்ளார். அமெரிக்க உதவியுடன் இந்த நவீன ஆய்வுகூட கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இந்த உதவியின்மூலம் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான வசதிகளைக் கொண்டதாக இந்த ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் வெடிகுண்டு மீட்பு- 

மட்டக்களப்பு காத்தான்குடி நகரிலுள்ள முதியோர் இல்ல வீதியிலிருந்து இன்றையதினம் முற்பகல் 10.30 அளவில், வெடிக்காத நிலையில் 2அடி நீளமான 15கிலோ எடையுள்ள குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வாய்க்காலைத் துப்பரவு செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தபோதே குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. மிகவும் பழுதடைந்த நிலையில் இக்குண்டு உள்ளதாக தெரிவிக்கும் காத்தான்குடி பொலீசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

 யாழ். மணியந்தோட்டத்தில் திருச்சொரூபம் உடைப்பு-

யாழ். மணியந்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கைப் பகுதியில் பொதுமக்களால் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த திருஇருதய ஆண்டவரின் திருச்சொரூபம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே நேற்று முன்தினமிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வழிபாட்டுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களால் ஆயரிடமும், கிராமசேவையாளரிடமும் முறைப்பாடு செய்யடப்பட்டுள்ளது.

வட மாகாணத்திலும் புகை பரிசோதனை சான்றிதழ்-

ஜூன் மாதம் 01ஆம் திகதிமுதல் வட மாகாணத்திலும் புகைப் பரிசோதனை சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் சகல பகுதிகளிலும் தங்போது புகை பரிசோதனையை செய்து கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வாகனப்பதிவு உள்ள அனைவரும் புகைப் பரிசோதனை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை வட மாகாணத்தில புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படாததால் அற்கிருந்து தெற்கிற்கு வரும் வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமற்போனதாகவும், தற்போது வட மாகாணத்திலும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் சகல வாகனங்கள் தொடர்பிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற முடியும் என எஸ்.எச் ஹரிஷ்சந்திரி மேலும்; தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை சுவரை உடைத்து கைதி தப்பியோட்டம்;-

கொழும்பு, தெகிவளை பகுதியிலுள்ள கொஹூவல பொலீஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றமை தொடர்பில் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். களவொன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தவரே தப்பிச்சென்றுள்ளார். பொலிஸ் நிலையத்திலுள்ள சிறைக்கூடத்தின் சுவரை உடைத்துக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த தலைமைப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மேலும் இரு பொலீஸ் கான்ஸ்டபிள்களும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக விசேட பொலீஸ்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதுவராக நியமனம்-

இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான மூத்த இராஜதந்திரி சமந்தா பவர் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகையின் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சமந்தா பவர், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய தீர்மானங்களை எடுத்து வருபவராக உள்ளார். இதேவேளை, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றும் சூசன் ரைஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவராகச் சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ள நிலையில் சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும், மனித உரிமை விவகாரங்களிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இறுக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படையின் ஹெலிகொப்டர் திடீர் தரையிறக்கம்-

கொழும்பிலிருந்து விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச்சென்ற ´பெல் 412´ என்ற ஹெலிகொப்டர் கட்டுபெத்த மைதானத்தில் இன்றையதினம் காலையில் திடீரென தரையிறக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் என.;டி விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை-

வவுனியா ஹொரோவப்பத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையொன்று கொள்ளையர்களால் உடைக்கப்பற்று 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. நேற்றிரவு இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை வவுனியாவில் அண்மைக்காலமாக வியாபார நிலையங்கள், வழிபாட்டிடங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கலாம்-அமைச்சர் ஹக்கீம்-

தங்களது முந்தைய வசிப்பிடங்களில் இருந்து, 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும், யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்குமே வாக்களிக்கும் வகையில் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தலுக்கு முன்பாக, அமுல்படுத்தும் வகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டுக்கு முன்;, யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்தவர்களுடைய பெயர்கள் 2009ஆம் ஆண்டுக்கு முந்திய வாக்காளர் இடாப்புகளில் வட மாகாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ இடம்பெற்றிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் 2009ஆம் ஆண்டில் 18வயதிற்கு குறைந்தவர்களாகவே இருக்கவேண்டும். அதற்கு பின்னர் வருகின்ற தேர்தல்களில், அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இரு வருடங்கள் அமுலில் இருக்கும். தேவைப்படின் துறைசார்ந்த அமைச்சர் அதனை மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு அமுல்செய்ய முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 6 June 2013
Posted in செய்திகள் 

13ஆவது அரசியலமைப்பை திருத்த வேண்டியதில்லை-

JR Rajivஇந்திய தூதுக்குழு- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் வட மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியே ஆக வேண்டும் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் யாழ் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே இந்தியக் குழுவினர் மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி, பொலீஸ் அதிகாரங்களை நீக்கிட்டு தேர்தல் நடத்தவும்- குணதாச அமரசேகர-

13ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் பயனில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் குணதாச அமரசேகர இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை ஒழிக்காது அரசாங்கம் வடக்குத் தேர்தலை நடத்துமானால் அது பிரிவினைவாதிகளின் ஈழக் கனவை நனவாக்கும். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் தேவையில்லாத திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. எனவே ஜனாதிபதி உடனடியாக 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி, பொலீஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக பிக்கு சங்கம் நடவடிக்கை-

காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாமல் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பிக்குகள் சம்மேளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சம்மேளனத்தின் செயலாளர் தொம்பகொட சாராநந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரு சரத்துக்களை அகற்ற அரசாங்கம எடுத்த நடவடிக்கைக்கு தாம் பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், வட மாகாணசபை தேர்தல், காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை இரத்து செய்த பின்னரே நடத்தப்படவேண்டும் என்றும் தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 14 இலங்கை அகதிகள் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்குத் தயார்நிலையில் இருந்த 14 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்திய கேரள மாநிலத்தின் ஏர்னாகுளம் பகுதியில் வைத்து கொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் பஸ் நிலையத்திற்கு அருகில் விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கொச்சி பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து இவர்கள் கொச்சிக்குச் சென்றுள்ளனர். ஜுட் சுசாந், ராஜீவ், கதிர்வேல், வினோத்குமார், தமிழ்செல்வன், புவனேஸ்வரன், குணசேகரன், பாஸ்கரன், முருகையன், பஞ்சேஸ்வரன், நித்தியகுமார், வினித்குமார், தீபன்,  முத்துலிங்கம், ஆகியோரே கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களாவர். கைதானவர்களை தாம் வசித்த அகதிமுகாம்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அரிய தாவர பாகங்களைக் கடத்தியவர் கைது-

5ஆயிரத்து 756 கிலோகிராம் எடை கொண்ட கிடைத்தற்கரிய தாவரங்களின் பாகங்களைக் கடத்திய ஒருவர் பொலநறுவையின் வெலிகந்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுமாலை வெலிகந்தை  வடமுனை பகுதியில் லொறியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது தாவர பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 118 உரப் பைகளில் இந்த தாவர பாகங்கள் அடைக்கப்பட்டு லொறிமூலம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இவை பாதுகாக்கப்பட்ட தாவர இனத்தைச் சார்ந்தவை என்பதுடன் தம் வசம் வைத்திருத்தல் மற்றும் கொண்டு செல்லல் சட்டவிரோதமானது எனவும் பொலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் சென்னையில் கைது-

தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 100 கிறாம் எடைகொண்ட தங்க பிஸ்கட்டுக்களை தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்து கடத்திச் சென்றுள்ளார். மிகவும் சூட்சுமமான முறையில் கறுப்பு காகிதத்தினால் சுற்றியவாறு இவற்றை எடுத்துச் சென்றுள்ள நிலையிலும், சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகமடைந்து இவரைக் கைதுசெய்துள்ளனர். கைதானவர் 45 வயதான மொஹமட் நௌசான் என தெரியவந்துள்ளது. இலங்கையிலிருந்து நேற்றையதினம் மாலை 2.45 மணியளவில் பயணித்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பயணித்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெலிக்கடை சிறைக்கைதி கூரைமீது ஏறி உண்ணாவிரதம்-

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவர் கூரைமீது ஏறி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 55வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள கைதியே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டே இவருக்கு விடுதலை கிடைக்கவுள்ளது. எனினும் வீட்டு விடுமுறை வழங்கும் நிவாரணமாக தனக்கு விடுதலை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தே இக்கைதி உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரியவருகிறது.

வீடுகளைக் கையளிப்பதாக வாக்குறுதி, சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது-

அம்பாறையின் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை மேலும் ஒருவாரத்திற்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்திற்குள் நேற்றுமுற்பகல் பிரவேசித்த மக்கள் இரவுவரையில் தொடர்ந்து சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்காக நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளில் இதுவரை குடியேற அனுமதிக்கப்பட்வில்லை என இம்மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதனையடுத்து சுனாமியால் உண்மையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பதாக வீடுகளைக் கையளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து சத்தியாக்கிரக நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு, விளக்கமறியல் சிறையில் தேடுதல்; நடவடிக்கை-

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் சுமார் 60 அதிகாரிகளைக் கொண்டு நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்குள்ள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது 33 கையடக்கத் தொலைபேசிகள், 15 சிம் அட்டைகள் உட்பட 100 கிராம் ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்குலானை தேவாலய உருவச்சிலைகள் சேதம்-

கொழும்பு புறநகரான ரத்மலானைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அங்குலானை, புனித. பிரான்ஸிஸ் தேவாலயத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் தேவாலயத்திற்கு உள்ளிருந்த சொரூபங்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பல பொருட்களை அடித்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளதாக அங்குலானை பொலீசார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத குழுவினரே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். பூஜைபீடம், பூஜை பீடமேசை மற்றும் இரு சொரூபங்களும்; சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 பிபிசி

இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய ஒரு அரசியல் சட்டத்திருத்தத்தை ஆளும் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

பிபிசிக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டி
mahinda_daglas-lankatruthமாகாண சபைகள் இணைவதை ரத்து செய்ய புதிய நகர்வு ?

இலங்கையில் மாகாண சபைகள் இணைய விரும்பினால், அவைகள் இணைய வழிவகை செய்யும் 13வது அரசியல் சட்டத்திருத்தப் பிரிவை ரத்து செய்ய இலங்கை அரசு முயலுவதாக வரும் செய்திகள் குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மேலும் இந்த திவினெகும போன்ற, மாகாண அரசுகளின் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் மத்திய அரசு , சட்டம் கொண்டுவர விரும்பினால், தற்போது அனைத்து மாகாணங்களும் அங்கீகரித்தால் மட்டுமே அது சட்டமாகும் என்ற நிலையை மாற்றி, பெரும்பான்மை மாநிலங்கள் அங்கீகரித்தாலே போதும் என்ற நிலையை உருவாக்கவும் அரசு ஒரு உத்தேச திட்டத்தை முன்வைக்கப்போவதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா, இது குறித்து தமிழோசையிடம் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் இந்த பிரேரணைகள் குறித்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாக தமக்குக் கொடுக்கப்பட்டாலும், அதற்குரிய போதிய விளக்கங்கள் இல்லாததால், இது குறித்து தன்னால் உடனடியாக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை என்றார்.

ஆனால் நாளை வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஏதேனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வந்தால், அது குறித்து முழுமையாகப் பரிசீலித்து ஒரு முடிவை தன்னால் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகின்றபோது, இனவாத நிலைப்பாட்டையோ அல்லது தொடர்ந்து சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையோ தவிர்க்கவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இந்த நிலை தொடர்வது சரியல்ல என்றும் தான் இந்தக் கூட்டத்தில் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்து பேசுகையில், உங்களை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் உங்களை ( டக்ளஸை) அமைச்சரவையில் வைத்திருக்கிறோம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை வேறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகள் வேறு என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் 13வது சட்டத்திருத்தத்தின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் குறைப்பது என்று இலங்கை அரசு உத்தேசித்தால் , அது குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்று கேட்ட்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆராய்ந்துதான் பதிலளிக்கவேண்டும், ஏனென்றால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று அரசு கூறும் போது, அவசரப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றார் டக்ளஸ்

தியாகி பொன். சிவகுமாரனின் 39ம் ஆண்டு நினைவுதினம்-

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 39ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். அவர் 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கிலுள்ள படையினரை அகற்றுமாறு கபே கோரிக்கை-

வடக்கில் நீதியான முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனில், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து படையினரை உடன் அகற்றுமாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கபே இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாப் இக் கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கில் 2012ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை படையினர் கோரி வருகின்றனர். கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் வாக்காளர் பட்டியலை வழங்குமாறு கோரி மிரட்டுவதாக தெரியவருகிறது. இது குறித்து எம்மிடம் பலர் முறையிட்டுள்ளனர வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் அங்குள்ள படைகள் அகற்றப்பட வேண்டும். சிவில் நடவடிக்கைகள் யாவும் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன்மூலமே நீதியான தேர்தலை அங்கு நடத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி சலுகை நீடிப்பு-

ஈரானிடமிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பான சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த சலுகையினை அளித்துள்ளது. மேலும் ஆறுமாத காலத்திற்கு ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதிசெய்ய அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா ஏற்கனவே கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில உதவிகளை வழங்கி வருகின்றது;. இதன்படி இலங்கை, சீனா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய பெறுமதிகள் இழக்கப்படுவதாக கனடா குற்றச்சாட்டு-

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் இழக்கப்பட்டு வருவதாக கனடா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளை இதற்கு முன்னர் பொதுநலவாய நாடுகள் எவ்வாறு அணுகியதோ, அதேபோல, இலங்கையையும் அணுக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தூதுவர் ஹுஜ் சேகல் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமது பொறுப்புக்கூறும் தன்மையை நிலைநிறுத்தும் வகையிலான எந்தவித முன்னெடுப்புக்கான சமிஞ்கைகள் தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் எந்தவகையான குழு பங்கேற்கும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவன் கோவில் பூசகர் படுகொலை-

கதிர்காமத்தில் உள்ள செல்லக் கதிர்காமம் வள்ளிக்குகை சிவன் கோவிலின் தலைமைப் பூசகர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை 7 மணியளவில் பூசகரின் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, கோவிலுக்கு பின்புறமாக உள்ள காட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 70 வயதான பூசகரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் கடத்தப்பட்டமை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது-

சென்னையில் பிரித்தானிய தம்பதி கடத்தப்பட்ட விடயமாக சந்தேகநபர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஸ்கொட்லாண்ட்யார்ட் பொலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து இந்த பிரித்தானிய தம்பதியினர் கடத்தப்பட்டிருந்தனர். இக் கடத்தல் சம்பவமானது லண்டனிலும் சென்னையிலும் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பிரித்தானிய தம்பதியினர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். லண்டனின் டோர்செட் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை பிரித்தானிய பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் இரு இலங்கையர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சென்னை பொலீசார் ஏற்கனவே கைதுசெய்துள்ளனர்.

அகதிகள் உண்ணாவிரதம்-

தங்களை விடுவிக்குமாறு கோரி, தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இப் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 அகதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மீது எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல், நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பது நியாயமில்லாத செயல் என இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை முன்வைத்து சில மாதங்களுக்கு முன்னர் இந்த முகாமைச் சேர்ந்த சசிகரன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மனு-

இந்து ஆலயங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் ஜனதிபதிக்கு மனுவொன்றை அனுப்பியுள்ளது. இந்த மனு குறித்த ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் நேற்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தவாரம நான்கு இந்து ஆலயங்கள் தாக்கி கொள்ளையிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

வடக்கில் தேர்தலை நடத்திய இலங்கையின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தலாம்-அமைச்சர் பீரிஸ்-

வட மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் ஊடாகவே இலங்கையின் முன்னேற்றத் தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும். அதேபோன்று வட மாகாணசபை தேர்தல் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். பிரிட்டன் பிரதமர் உட்பட பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே, மிகவும் வெற்றிகரமான பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 4 June 2013
Posted in செய்திகள் 

பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும சத்தியப் பிரமாணம்-

கம்பஹா மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும, சபாநாயகர் முன்னிலையில் இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மே மாதம் 30ஆம் திகதி மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின்படி அஜித் மானப்பெரும, டொக்டர் ஜயலத் ஜயவர்தனவுக்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறோம்-எரிக் சொல்ஹெய்ம்-

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்த நிலைப்பாடு முடிவடைந்து பல வருடங்கள் கழிந்த போதிலும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் தாம் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்ததாகவும், இலங்கை தொடர்பில் செய்திகளை அறிந்துக்கொள்ளும் தாம் அது தொடர்பானவர்களை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனித் தமிழீழம் என்ற கோரிக்கையை நிராகரித்த அவர், இலங்கையின் ஜனநாயக வரம்பிற்குள் கலந்துரையாடல்கள்மூலம் தீர்வு எட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்கள் சீனாவுக்கு அடிமைகளாகும் நிலை-ஐ.தே.கட்சி-

இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீனா இலங்கைக்கு நிபத்தனையின் அடிப்படையிலேயே கடனுதவிகளை வழங்குகின்றது. நுரைச்சோலை அனல்மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்துகொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது. அந்த கடனை திரும்பிச் செலுத்த கால தாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குகீழ் கொண்டுவர யோசனை கூறியுள்ளது. இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது. இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார். 

காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்-

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கெர்ணடிருந்த 103 முஸ்லிம்கள்மீது 1990ஆம் ஆண்டு புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன், பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும் – கிரிஸ் நோனிஸ்-

28 வருடங்களின் பின் இலங்கை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார். கிரிஸ் நோனிஸ், வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.  பில்லியன் டொலர்கள் செலவில் 2லட்சத்து 97ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட செயற்திட்டம் நடத்தப்பட்டமையும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளதுடன், இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை தொடர்பில் மேற்கத்தைய நாடுகள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கிரிஸ் நோனிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- திருகோணமலை

மட்டக்களப்பு பிரதான வீதியில் கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தூணில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 19 வயதுடைய ஞானரட்ணம் கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்தவராவார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்துச் சென்றவர் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சீனக்குடா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாலைதீவுப் பிரஜை கண்டியில் கைது-

வீசா இல்லாத நிலையில் இலங்கையில் தங்கியிருந்த மாலைதீவுப் பிரஜை ஒருவர் கண்டி, அலவத்துகொட, மாவத்துபொல பிரதேசத்தில் வைத்து பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டி, அலவத்துகொட பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அலவத்துகொட பொலீசார் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்;கொண்டு வருகின்றனர்.

 இலங்கையில் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பு-

ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினாலேயே இந்த ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு  விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து  தயாரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக்கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் ஆயர், பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் நீர்கொழும்பு சிறைக்கு விஜயம்-

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்றுகாலை 10 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்செய்து தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதுடன் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து  கொண்டுள்ளனர் .தமது வழக்கு  தொடர்பான  விடயங்களை பார்வையிடுமாறும், தமது வழக்குகளை  மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்களை தொடர்புபடுத்தி விடுமாறும், தமது குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடும்ப நிலைமைகள் மற்றும் வழக்கறிஞர்கள் குறித்து கவனம் எடுப்பதாக உறுதியளித்ததுடன், சிறையில் இருக்கும் சகல தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களையும் பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளனர்.

News

Posted by plotenewseditor on 3 June 2013
Posted in செய்திகள் 

அமரர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன அவர்களின் இறுதி நிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்பு-

plotesiddarthan-207x300[1]ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்றுமாலை ஜா-எல, வெலிகம்பிட்டிய றோமன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெற்றது. முன்னதாக அன்னாரது பூதவுடல் ஜா-எல, வெலிகம்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி உரையாற்றினர். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர். த.சித்தார்த்தன் அவர்கள், டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். ;தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாக பாடுபட்ட சிங்களத் தலைவர்கள் ஒரு சிலரில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் ஒருவராவார். யுத்த காலத்தில் அவர் பல தடைகளையும் தாண்டி தமிழ் மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளிலும், அவர்களின் புனர்வாழ்விலும் அக்கறை காட்டியவர் என்று தெரிவித்தார்.

சீதைக்கு கோயில் அமைப்பதற்கு ஆட்சேபனை-

Ravananநுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் சீதை அம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கு இந்தியாவினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கும் முன் இராவணன் மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்படவேண்டும். இராவணன் மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், இராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார். இராவணன் சீதையை பலவந்தப்படுத்தியிருந்தால் சீதை அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு இராவணன் மன்னன் இடையூறு விளைவித்ததில்லை. எனவே, இராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைக்கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்-

velikadaகொழும்பு, வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2,500 கைதிகளை வெலிக்கடை சிறையிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு  திட்டமிட்டுள்ளது. கொழும்பிலிருந்து சிறைக்கைதிகளை வெளியேற்றும் திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இடவசதியுள்ள சிறைகளுக்கு படிப்படியாக கைதிகள் அனுப்பிவைக்கப்படுகின்றனர். களுத்துறை, காலி, வட்டரெக்க ஆகிய சிறைச்சாலைகளுக்கு தற்போது வெலிக்கடையிலிருந்து கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறையிலுள்ள சகல பெண் கைதிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் கூறியுள்ளார்.

 வாக்காளர் பதிவு சட்டமூலத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு வழங்கும் என நம்பிக்கை

வட மாகாணசபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள வாக்காளர் பதிவு திருத்தச் சட்டமூலத்துக்கு பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.கட்சி எதிர்ப்பு வெளியிடாது என்று நம்புவதாக ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சட்டமூலம் அவசியம் என்பது ஐ.தே.கட்சிக்கு தெரியும். எனவே பெரும்பான்மை பலத்தினால் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமையில் மிகவும் அவசியமானதாக காணப்படுகின்ற இந்த சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கட்டாயம் நிறைவேற்றும். அதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 06ம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள வாக்காளர் பதிவு திருத்தச் சட்டமூலம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகசின் சிறைசாலையில் தேடுதல், போதைப்பொருள், கைப்பேசிகள் மீட்பு-

magasenகொழும்பு மகசின் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆறு ஹெரோயின் போதைப்பொருள் பக்கெற்றுகளும் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமாலை மேற்படி தேடுதல் நடத்தப்பட்டதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேகநபர்கள் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜி.எச் சிறைச்சாலையில் இத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்துவதற்கு திட்டம்-

வெளிநாடுகளில் வாழும் புலிகளுக்கு ஆதரவாகவுள்ள புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிப மகாநாமஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கை சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களைப் போக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமென இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் பிரதிப மகாநாமஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் இளம் பெண் தற்கொலை-

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து, கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன்படி யாழ் சுன்னாகத்தில் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து இப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர். யாழ். கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த 26வயதான சர்வேஸ்வரன் பிருந்தா என்ற இளம் பெண்ணே இன்றுகாலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலீசார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 நீதிபதி சுனில் அபேசிங்கவுக்கு விளக்கமறியல்-

கொழும்பு, ஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட வேளையிலேயே அவருக்கான விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 30ஆம் திகதி லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குண்டை வெடிக்கச்செய்து விமானப்படை வீரர் தற்கொலை-

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் நேற்றையதினம் இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர் கைகுண்டொன்றை வெடிக்க வைத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானப்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபம்-

DSC01533ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலருமான டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்,
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாக பாடுபட்ட சிங்களத் தலைவர்கள் ஒரு சிலரில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் ஒருவராவார். இனமத பேதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமென பாடுபட்ட இவர், அனைத்து சமூகங்களின் நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றிருந்தார்.
யுத்த காலத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழ் மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும், அவர்களின் புனர்வாழ்விலும் அக்கறை காட்டியவர். அத்துடன் அவர் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தயங்காது குரல் கொடுத்துவந்த ஒரு ஜனநாயகவாதி.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவருடன் நான் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் தான் சார்ந்த இனத்தின்மேல் மிகவும் பற்றுறுதி வைத்திருந்தாலும், சிறுபான்மை தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு வர வேண்டுமென்பதிலும், தமிழ் மக்கள் முகம்கொடுத்த அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் அக்கறை கொண்டு அயராது உழைத்து வந்தார்.
இனங்களிடையே ஒற்றுமையை வேண்டிநின்ற, அதற்காக அயராது உழைத்துநின்ற, டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் இழப்பானது மிகப்பெரிய இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கொழும்பில் இருக்க முடியுமென்றால் வடக்கில் சிங்களவர்கள் ஏன் வசிக்க முடியாது-ஹெல உறுமய-

2 லட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர். வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா? வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட்ட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோமா? பம்பலப்பிட்டியவில் கூட்டமைப்பு காரியாலமொன்றை திறந்துவைத்துள்ளது அதற்கு நாம் கல்லெறிந்துள்ளோமா? என ஹெல உறுமயவின் செயலர் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை நகரசபை – அமெரிக்க தூதரக ஒப்பந்தம் இடைநிறுத்தம்-

திருகோணமலை நகரசபைக்கும், அமெரிக்க தூதரகத்துக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள திருமலை நகரசபைக்கும், அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது. கல்வி தகவல் நிலையமொன்றை ஸ்தாபிக்கவே உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. எனினும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் செய்த இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை-

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் நாளை இடம்பெறவுள்ள பரீட்சையில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்;டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஊழியரை நாளை மறுதினம்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை மாணவர்களின் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த 12 பொலீசாரும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வீடு திரும்பியுள்ளனர்.

உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலர்களை பதவி நீக்க நடவடிக்கை-

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிரூபத்தின் ஊடாக  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்  அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். இந்த பதவிகளிலிருந்து நீக்கப்படும் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

புலி உறுப்பினர் தப்பியமை தொடர்பில் சிறை அதிகாரிகள்மீது விசாரணை-

மாத்தறை வெசாக் வலயத்திலிருந்து புலி உறுப்பினர் தப்பிச்செல்ல உதவிய இரு  சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து சிறைச்சாலை மற்றும் பொலீசார் இணைந்து இரு குழுக்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு அதிகாரிகளும் இலட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, குறித்த சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேற்படி அதிகாரிகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச்சென்ற புலி உறுப்பினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் நீண்டகாலம் மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் குறித்த புலி உறுப்பினர் தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என மேலும் கூறப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் கடத்தல்-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய சிவராசா சிவகரன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலீஸ்  நிலையத்தில் உறவினர்களால் இது விடயமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரசசார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் உறவினரான ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன்னிடம் கூறயதாக கடத்தப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு பொலீசார் அறிவித்துள்ள போதிலும் அவர் இதுவரை பொலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நாடுகடத்தப்படும் இலங்கையர்கள் தொடர்பில் ஐ.நா. கவனம்-

பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐ.நா அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கொரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடுத்தப்படுகிறார்களா? அவ்வாறு நாடு கடத்தப்படுவதன்மூலம் உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்களா என்பது பற்றி பிரித்தானிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 12 மாதகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐ.நா அமைப்பு, பிரித்தானிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

பிள்ளையாரடியில் புத்தர்சிலை வைக்க மேன்முறையீடு

மட்டக்களப்பு நகரில் பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பொதுமக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலீசார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. எங்களால் புத்தர் சிலை வைக்கமுடியாமல் போனால் வேறு யாரால் வைக்க முடியும் என குறித்த தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மூன்று கோயில்கள் உடைத்து கொள்ளை-

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோயில் உடைக்கப்பட்டு கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. களுவாஞ்சிகுடி பகுதியிலேயே இவ்வாறு மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதன்படி குருக்கள் மடம் செல்லக்கதிர்காமர் ஆலயம், குருக்கள்மடம் ஐயனார் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம் ஆகிய ஆலயங்களே உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். குருக்கள்மடம் சிறீலசிறீ செல்லக்கதிர்காமத்தின் சகல மூல விக்ரகங்கள், பரிபால விக்ரகம்கள் உடைக்கப்பட்டு தங்க தகடுகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆலய களஞ்சியசாலை உடைக்கப்பட்டு தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலய மூலவிக்ரகம் உடைக்கப்பட்டு தங்க தகடு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.