புத்தகாயா தாக்குதலுக்கு எதிராக சத்தியாக்கிரகம்-

பீஹார் புத்தகாயா மகாபோதி விகாரை வளாகத்தில், இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 13ஆம் திகதியன்று சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சத்தியாகிரகப் போராட்டம் புத்தகாயா வளாகத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில், நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது உரையாற்றிய, தேசிய சங்க சம்மேளன செயலாளர் தொம்பகொட சாராணந்த தேரர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தல் சர்வதேச தேர்தலாக மாறியுள்ளது-ஐ.தே.கட்சி-

வட மாகாணசபை தேர்தல் தற்சமயம் சர்வதேச தேர்தலாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலர் திஸ்ச அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண சபை தேர்தலானது இலங்கையின் உள்ளக தேர்தலாக மட்டும் கருத முடியாது. இது சர்வதேச தேர்தலாக உருவெடுத்துள்ளது. இத் தேர்தலை நடத்துவதாக இந்தியாவிடம் உறுதிபூண்டமை, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் உறுதி வழங்கியமை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திடம் உறுதி வழங்கியமை மூலம் இது நன்றாக புலப்படுகின்றது எனவே இது சர்வதேசமே அவதானிக்கும் தேர்தலாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளவாலையில் பிரித்தானியப் பிரஜை கைது-

யாழ்.இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு அருகில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு சட்ட வரையறைகளை மீறி, விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டிற்கு வருகை தந்தமைக்காவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பிரித்தானியப் பிரஜை மீண்டும் எதிர்வரும் 21ம்திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விசாரணைகளை இளவாலை பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் காயம்-

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் பழைய இரும்பு பொருட்கள் சேகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் அந்நிலையத்தை நடத்திச் சென்றவரின் மகன் என பொலீசார் தெரிவித்துள்ளனர். பழைய இரும்பு பொருட்களை பிரிக்கும்போது மோட்டார் குண்டு ஒன்று வெடித்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மத்திய முகாம் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மல்லாகம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்றுகாலை 7.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று திரும்பி வந்த ஒருவர் சுன்னாகம் பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த தில்லையம்பலம் இராசலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்மீது தாக்குதல்-

யாழ். நல்லூர் செம்மணி வீதியில் குடித்துவிட்டு கும்மாளம் போட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழக சட்டபீட சிங்கள மாணவர்கள் இருவர் நல்லூர் செம்மணி வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று முன்தினம் இரவு 9மணியளவில் நடைபெற்றுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் எதற்காக இவர்களைத் தாக்கினார்கள் என்ற விடயம் வெளிப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வு-

துன்புறுத்தல்கள் தொடர்பில் தேசிய ரீதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் அவ்வமைப்பின் மனித உரிமைகள் குழு அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். துன்புறுத்தல்களைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசத்தில் கடமையாற்றுவர்;-ஜனாதிபதி-

நாட்டில் சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கும், தமிழ் அதிகாரிகள் சிங்கள பிரதேசங்களுக்கும் பணிகளுக்காக செல்ல வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னேற்றம் பற்றி ஆராயும் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தமிழ் அதிகாரிகள் சிங்கள பிரதேசங்களுக்கும் சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கும் பணிக்காக செல்ல வேண்டும். மக்களின் நலன்களுக்கான தீர்மானங்களை எடுப்பதுடன் இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முதன்மையான அமைச்சாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுடன் பயணித்த கப்பல் சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியது-

இலங்கையர்கள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன் பயணித்த கப்பலொன்று சோமாலிய கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. ஆ.யு.அல்பெடோ என்ற இக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டிருந்தது. மலேசிய நிறுவனமொன்றிற்குச் சொந்தமான குறித்த கப்பல் சோமாலியாவிற்கு 900 கடல்மைல் தொலைவில், இந்து சமுத்திரத்தில் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் 23 பணியாளர்கள் இருந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கப்பல் நீரில் மூழ்கியபோது அதில் இருந்த 4 வெளிநாட்டவர்களும் 7 கடற்கொள்ளையர்களும் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சோமாலிய கடற் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஐரோப்பிய கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஆ.யு.அல்பெடோ என்ற இந்தக் கப்பலின் பிரதான பொறியியலாளராக இலங்கை மாலுமியான ரொஹான் வெக்வெல்ல செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.