Posted by plotenewseditor on 14 July 2014
Posted in செய்திகள்
புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் நேற்று 13ம்திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நாளை மறுதினம் 16ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. வீரமக்கள் தினத்தின் 02ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மௌன அஞ்சலியும், மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி புதன்கிழமை அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஆலய கட்டிட நிர்மாணத்திற்கு நிதியுதவி-

புளொட்டின் 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி தொடர்ந்து பல்வேறு சமூகப் பணிகள் கழகத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இச் சமூகப் பணிகள் கல்வி, விளையாட்டு, ஆலய அபிவிருத்திகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புளொட்டின் குடியேற்ற கிராமங்களில் ஒன்றான வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலய கட்டிட வேலைகளுக்கென, 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட்டின் லண்டன் கிளையைச் சேர்ந்த தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப் பணம் வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் உபதலைவர் திரு சி.கணேசமூர்த்தி, செயலாளர் செல்வி கே.பகவதி, பொருளாளர் திரு த.இலங்கைரத்னம், உப செயலாளர் சி.குகதாசன் மற்றும் புளொட் அமைப்பைச் சேர்ந்த ராஜா, சுரேஷ்குமார், காண்டி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
25ஆவது வீரமக்கள் தினம் – தெற்கிலுப்பைக்குளம் ஆலய கட்டிட வேலைகளுக்கு நிதியுதவி-



வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் அமையப்பெற்றுள்ள சிறீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிட வேலைகளுக்கென, புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான தோழர் சங்கர் ஐயா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப் பணம் ஆலய நிர்வாகத்தினரிடம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் வைத்து, வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கே.பாலகிருஷ்னன், செயலாளர் திரு பி.சதீஸ்குமார், பொருளாளர் திரு வி.அருட்செல்வன், நிர்வாக சபை உறுப்பினர்களான திரு. திருச்செல்வம் திரு. கோகிலகுமார், திரு. சிறிகாந்தன், திரு. வசந்த மற்றும் புளொட் அமைப்பைச் சேர்ந்த யோகராஜன், வின்சன் கெனடி, சிறி, சுரேஷ்குமார், காண்டி, சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது,