கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பான அடுத்த அமர்வு-

Kilinochchiyil Kaanaamatponorகாணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதமளவில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதிமுதல் 22ம் திகதிவரையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடாபில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தவள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதிமுதல் 21ம் திகதிவரையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது.. புதிதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் எச்.டபிள்யூ குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெசோ கூட்டத்தில் இலங்கை தொடர்பில் பல தீர்மானங்கள்-

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கூட்டம் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. இதில், இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், சர்வதேச விசாரணைக்குழு இந்தியா வர விசா வழங்க வேண்டும், ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வை அனுமதிக்கக்கூடாது, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய டெசோ கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் க.அன்பழகன் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவனும் மற்றும் கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், சுப்புலெட்சுமி, ஜெகதீசன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஜே.வி.பி ஆதரவாளர்கள்மீது துப்பாக்கிச்சூடு-

மொனராகலை படல்கும்பரவில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தேர்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த குழுவினர்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். படல்கும்பர பிரதேச சபையின் தலைவர், பிரதி தலைவர் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலை மேற்கொண்டதுடன் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியதாக ஜே.வி.பி முறைப்பாடு செய்துள்ளது. பொலிஸார், பாதுகாப்பு கடமையில் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது என ஜே.வி.பி மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

13 வருடங்களுக்கு முன் கொலை செய்த இலங்கையர் கைது-

சுவிஸில் தனது காதலியை கொலை செய்துவிட்டு போலி ஆவணங்களுடன் நியூசிலாந்து சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த இலங்கையரை ஒக்லண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு தனது காதலியான 23 வயதுடைய கவிதா என்பரையே குறித்த நபர் கொலை செய்துள்ளார். குறித்த சந்தேக நபரை பொலிஸார் 13 வருடங்களாக தேடி வந்த நிலையிலேயே அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸி செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற நான்கு பேர் உட்பட 6 இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திராவின் ஒன்கோல் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். சண்முகலிங்கம் (வயது 47), பர்னபாஸ் (வயது 51), இவரின் மனைவி அஞ்சலி (வயது 46), பாஸ்கர் (வயது 45) ஆகியோரே அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு படகு மூலம் அழைத்துச் சென்ற மீனவரையும், அத்துடன் இவர்களிடம் 5 இலட்சம் இந்திய ரூபாவை (இலங்கை மதிப்பில் சுமார் 12 இலட்சம் ரூபா) பெற்று சரக்கு கப்பல்மூலம் அவஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற தரகரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து விமானம்மூலம் சென்னை சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஜனாதிபதியாகும் தகுதி மகிந்தவுக்கு இல்லை- சரத்.என்.சில்வா-

இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மஹிந்த ராஜபக்ஷ் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாகவிருந்தது. எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்பதற்கு வசதியாக புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார். ஆனால், அந்த புதிய திருத்தம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது என, முதல் தவணையின்போது அவரை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கூறியுள்ளார். அரசியலமைப்பின் பிரிவு 31 (2) இன்படி, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன்பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என கூறப்பட்டுள்ளது, அப்படியென்றால் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அந்த தகுதியீனமும் உருவாகிவிடுகின்றது என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுடன் சரத் சில்வா இணைந்து செயற்பட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2010-ம் ஆண்டு ஜனவரி 27-ம் திகதியன்றே, அவர் இன்னொரு தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவர் நிலையை அடைந்துவிட்டார். 18-ம் அரசியலமைப்புத் திருத்தத்தின்மூலம், மூன்றாவது தடவையும் தன்னால் ஜனாதிபதியாக வரமுடியும் என மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். ஆனால் இந்தத் திருத்தத்தின்மூலம், அவருக்கு ஏற்பட்ட அந்த தகுதியீனம் மாறப்போவதில்லை. குறித்த அரசியலமைப்புத் திருத்தம் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னர் பதவியேற்கவரும் ஜனாதிபதிகளுக்கேப் பொருந்தும். மஹிந்த ராஜபக்ஷவின் 6 ஆண்டுகால பதவிக்காலம் முடியும் 2016-ம் ஆண்டு நவம்பர் 19-ம் திகதிக்கு மூன்று 3 மாதங்களுக்கு முன்னரே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சரத் சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 1999-முதல் 2009 வரையான 10 ஆண்டு பதவிக் காலத்தில் சரத் என் சில்வா, அரசியல் ரீதியில் திருப்புமுனையாக அமைந்த பல்வேறு தீர்ப்புகளையும் அரசியலமைப்பு பொருள் விளக்கங்களையும் வழங்கியுள்ளார். வடக்கு கிழக்கு பிராந்தியங்கள் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, சந்திரிகாவின் இரண்டாவது தவணை ஆட்சி ஒரு ஆண்டு முன்கூட்டியே முடிவடைந்தமை, மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை உள்ளிட்ட தீர்ப்புகளுக்கு சரத்.என்.சில்வாவே காரணமாக இருந்துள்ளார். சந்திரிகா அரசு புலிகளுடன் செய்துகொண்ட பீ-டொம் என்கின்ற சர்வதேச சுனாமி உதவிகளை பங்கிடும் நடைமுறை செல்லாது என அறிவிக்கப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு தாவியபோது அவர்கள் பாராளுமன்ற பதவியை இழக்கமாட்டார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டமை போன்ற தீர்ப்புகளும் சரத் சில்வாவினாலேயே அளிக்கப்பட்டது. ஜீ.எல். பீரிஸ் மறுப்பு இதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வெளியிட்டுள்ள கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார். ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் இருந்த தடை, அரசியலமைப்பின் 18-ம் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சட்டத்துறை பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளுர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.