Posted by plotenewseditor on 30 September 2014
Posted in செய்திகள்
ஊவா மாகாண முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்-
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டன் பி.பி.ஸி தமிழோசையைக் காப்பதற்கு கை கொடுக்குமாறு வேண்டுகோள்-
கடந்த 74 ஆண்டுகாலமாக லண்டனிலிருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நாடு கடத்துவதற்கு பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா பொலிஸி எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்துவிட பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் செய்திநிறுவனம் தமிழோசையாகும். இது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன்மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பி.பி.ஸி தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ்பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பேரிழப்பாகும். பி.பி.ஸி சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்தசேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக அமையும். எனவே இதனைத் தடுப்பதற்காக தயவு செய்து பி.பி.ஸி நிர்வாகத்துக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான கீழுள்ள விண்ணப்பத்தில் பெயரைப் பதிவு செய்வதுடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.
http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0
மேலும் செய்திகளை வாசிக்க…. Read more