Header image alt text

sutha

அமரர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)

மலர்வு: 17.04.1968 (புங்குடுதீவு)                    உதிர்வு: 08.01.2015 (சுவிஸ்லாந்து)

துயர் பகிர்வோம்

பாசமிகு தோழனே!

எங்கள் பயணத்தில்

உனது பணியும் பாரியதுதான்..

பாதியிலே  –  நீ

எமைவிட்டு செல்வதுதான்

பாரிய வேதனையைத் தருகிறது

உன்னுடன் தோழமையோடு நேசமாய் இருந்த – நாமின்று

உன் இழப்பால் துயருற்று நிற்கின்றோம்

உன் நினைவும் உன் பணியும்

எம் அமைப்பின் வரலாற்று ஏடுகளில்

என்றென்றும் நிலைத்திருக்கும்….

 
அன்னாரில் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களோடு, நாமும் எம் துயரை பகிர்ந்துகொள்வதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலிகளையும் செலுத்தி நிற்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு-

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் ,நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமது நன்றிகளை இதன்போது குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, “அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்திய தேர்தல்கள் ஆணையாளர், முப்படையினர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி. மஹிந்த ராஜபக்ஷவுக்கு என் விஷேட நன்றிகள், எனக் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் முடிவுகளை அடுத்து, யாருக்கும் மனதளவிலும் வேதனை அளிக்க வேண்டாம் என மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா-

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறந்த முறையில் தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொண்ட அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் அமைதியான முறையில் சுயாதீனமான தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையாளர், சிவில் சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே பார்வையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்-

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன. வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார். இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,

வடமாகாணம்

யாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். வன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர் . திகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

மத்திய மாகாணம்

மாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.

தென் மாகாணம்

காலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமத்திய மாகாணம்

பொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். அனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94%) வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றில் செல்லுபடியான வாக்குகள் – 12,123,452 (98.85%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 140,925 (1.15%)

ஜனாதிபதி தேர்தல் 2015: அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகள்

இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்களிப்பு முடிவுகளின் படி 

மகிந்தராஜபக்ஷ 11,864 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 14,976 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 14,163 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 16,116 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,879 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,270 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 10,382வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொலனறுவை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மைத்திரிபால சிறிசேன 9,480 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மகிந்தராஜபக்ஷ 4,309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஹம்பாந்தொட்ட மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 10,295 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 5,620 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மாத்தளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,683 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 8,394 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 8,281 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 7,513 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பதுளை மாவட்டம் அஞ்சல் மூல வாக்கு முடிவுகளின் படி,
மகிந்தராஜபக்ஷ 13,115 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன 13,031 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அஞ்சல்மூல வாக்களிப்பின்படி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளை பெற்றுள்ளார்
மஹிந்த ராஜபக்ச 4607 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது. இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை

கொழும்பு 75%
களுத்துறை 70 %
இரத்தினபுரி 70 %
நுவரெலியா 80 %
திருகோணமலை 72 %
மாத்தளை 75 %
கேகாலை 70 %
திகாமடுல்ல 70 %
குருநாகல் 76%
கண்டி 75 %

மட்டக்களப்பு 60.30%
மொனராகல 75 %
அனுராதபுரம் 76 %
பொலநறுவை 75 %
அம்பாந்தோட்டை 70%
கம்பகா 65 %
புத்தளம் 70%
மாத்தறை 73%
பதுளை 60%
காலி 79%      

யாழ்ப்பாணம் 61.14%
முல்லைத்தீவு 73%
வவுனியா 66%
மன்னார் 59%
கிளிநொச்சி 70%

சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன. மேலும் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுச் செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இதேவேளை 3 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு நடவடிக்கைகளில், மாத்தளையில் நுவரெலியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 70 வீத வாக்குப் பதிவுகளும் அம்பாறையில் 50 வீத வாக்குப் பதிவுகளும் கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் 75 வீத வாக்குப் பதிவுகளும் பதுளையில் 60 வீத வாக்குப் பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 50 வீத வாக்குப் பதிவும், கண்டியில் 65 வீத வாக்குப் பதிவும் கிளிநொச்சியில் 55 வீத வாக்குப் பதிவும் பதிவாகியுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 2.30 மணிவரை 61 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மைத்திரி நிச்சயம் வெல்வார் – மாவை

therthalதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழ் மக்கள் ஆர்வத்துடன்  வாக்களித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கொல்லன் கலட்டி தமிழ் கலவன் பாடசாலையில் தனது மனைவியுடன் சென்து வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மாவை இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் மக்களை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தோம். அதற்கமைய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காக சென்று வருகின்றனர். பொது எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என அவர் தெரிவித்தார்.

சனநாயகத்துக்காக வாக்களிக்கவில்லை-சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து கூறுகையில், இது ஜனநாயகத்துக்கான ஜனாதிபதி தேர்தல் இல்லை. எங்கள் வாக்குகளை வேறு ஒருவர் பயன்படுத்தக்கூடாது என்ற வகையில் நாங்கள் வாக்களித்து வருகின்றோம். ஆட்சி மாறினால் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. பொது எதிரணி ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டவுள்ளதாக கூறுகின்றது. அது தெற்கில் மட்டுமா அல்லது வடக்கிலும் நிலைநிறுத்தப்படுமா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது எனத்தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் காலை முதல் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கள்ளவாக்கு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது மக்கள் சுறு சுறுப்பாக வாக்களிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன –
அதே நேரம் மத்துகம, நாராவல கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு கெப் ரக வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் 155யையும்; . குறித்த வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்;.
மேலும் உடுகமவில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் வாக்குச்சீட்டுகள் போன்ற ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாகவும். அவை எவ்வாறான ஆவணங்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தேர்தல் அணையாளர் தெரிவித்தார்.

 வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின்  தலையில் சுட வேண்டும் என்றார்
பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்டக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற  கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.$

கைக் குண்டு வீச்சு

alvaiயாழ்.பருத்தித்துறை அல்வாய் சிறீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசியுள்ளதாகவும். இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியட்சகர் தெரிவித்தார். இது தொடர்பில் கபே அமைப்புக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு உறுப்பினர்களை அங்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கபே அமைப்பின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். மேலும் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் இருந்து பல கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புகள்-

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது. இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00மணி வரையில் வாக்களிக்க முடியும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது. காலையில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு மேல் மாகாணத்தில் இன்றுகாலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தவுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் மக்கள் காலை நேரத்தில் மந்தகதியிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மேல்மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தவுடனேயே கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

பிரான்ஸ் „சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்.

Attentat-Paris-Hebdostrasseபிரான்சில் கேலிச்சித்திரங்களுடன் வெளிவரும் நகைச்சுவை  வார இதழான ‘சார்லி ஹெப்டோ’வின் அலுவலகம் மீது இன்று நண்பகல் முகமூடி அணிந்த இரு துப்பாக்கிதாரிகள் தானியங்கி இயந்திர துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டும் ஐந்து பேர் ஆபத்தான நிலையிலும் 20 பேர்வரை காயமடைத்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் போலிஸ் அதிகாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் காரில் Bildschirmfoto-2015-01-07தப்பியோடியுள்ளனர். இவர்களை பிடிக்க பெரும் பொலிஸ் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிந்திய தகவல்களின் படி இச் செயலுடன் மூவர் சம்பத்தப்பட்டுள்தாகவும் தாக்குதலை நடத்தியோர் இனக்கணப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இனம் காணப்பட்டவர்கள் Said Kouachi, Cherif Kouachi வயது 32, 34 பிரான்சில் பிறந்தவர்கள் இவர்கள் சகோதரர்கள் மற்றையவர் Hamid Mourad. வயது 18 இவர் இரந்தர வதிவிடம் இல்லதவர். இவர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய கார்  Renault Clio என்றும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். Read more

மரண அறிவித்தல்-

வவுனியா கோவில்புதுக்குளம் ஐந்தாம் ஒழங்கையைச் சேர்ந்த அமரர் சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் இன்று(07.01.2015) புதன்கிழமை நண்பகல அகால மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். வவுனியா இலங்கை போக்குவரத்துக்கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரான அமரர் வசந்தன் அவர்கள் பல்கலைக்கழக வாழ்வை இடைநிறுத்தியதிலிருந்து இற்றைவரை கழகத்தின் செயற்பாடுகளில் தீவிர பங்கினை ஆற்றியவர். அன்னாரது இழப்பை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

 துயர் பகிர்கின்றோம்… suntharalingamமலர்வு : 1961.07.15                        உதிர்வு: 07.01.2015

 அமரர்: சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் (வசந்தன்)

தோழனே! இனிய நல் நண்பனே!

வசந்தனே!

எம் மக்களின் வசந்தத்திற்காய்

உன் வாழ்நாள் முழுவதையும வழங்கினாய் நீ!

பல்கலைக்கழகப் படிப்பை

பாதியில் விட்டுவிட்டு –

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய

அயராது உழைத்தாய் – நீ!

அகவை ஐம்பத்தினான்காகியும்

இல்லறம் புகமறுத்து

மக்கள் சேவையே நல்லறம் என

உரைத்து வாழ்ந்தவனே…

காலத்தின் கோலத்தால்

கால்தவறி வீழ்ந்து – எமை

கதிகலங்க வைத்துவிட்டு

இடைநடுவில் எங்கு சென்றாய் தோழா?

குரலிழந்த குயில்போல் – நாம்

நலிவடைந்து நிற்கின்றோம்

உன் பிரிவை – எமக்கு

சொல்வதற்கு வார்த்தையில்லை

செய்வதறியாது செயலிழந்து நிற்கின்றோம்

நீ கண்ட கனவு…

நீ கொண்ட லட்சியம்…

நீ செய்த பணிகள்…..

உன் வழியில்; நாம் தொடர்வோம்!!

நண்பனே, நற் தோழனே – உன்னை

பிரிய மனமின்றி

விம்மும் நெஞ்சங்களுடன்

விடை தருகின்றோம்!!!

அமைதியாய் போய்வா…..

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன், கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

07.01.2015

மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தவும்-சர்வதேச மன்னிப்புச் சபை-

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் அரசியல் பங்குபற்றுல் உரிமையை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது தாக்குதல், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனவே மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதே அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி உறுப்பினரது வாகனங்களுக்கு தீவைப்பு, பெலியத்தயில் துப்பாக்கிப் பிரயோகம்-

ஹொரனை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் அஜித் நவகமுவ என்பவரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலொரு வாகனம் அவருடையது என்றும் மற்றொன்று நண்பருடையது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெலியத்த பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை வீட்டில் காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார். துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் கோரிக்கை-

தனக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவல் சஜித் பிரேமதாச, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே சஜித் பிரேமதாச ஆதரவு வழங்கவுள்ளார் என்றும் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது தனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே. இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்குங்கள் என்று, தேர்தல் ஆணையாளரிடம் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள அவர், ‘இவ்வாறானதொரு நடவடிக்கை தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தடையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியம்-தேர்தல்கள் செயலகம்-

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான விடுமுறையை பெற்றுச்செல்வதற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார் அனைத்து தனியார் நிறுவனங்களும் இந்த சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் இதன்படி வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்காத தனியார் துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

மைத்திரிபாலவின் சகோதரர் பிணையில் விடுதலை-

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான ஷமிந்த சிறிசேன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திம்புலாகல பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான தம்மிக்க நிஷாந்த குமாரகேவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இந்நி;லையில் அவர், பொலிஸில் நேற்று ஆஜராகினார். இதனையடுத்து பொலிஸார் அவரை பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் நுவன் தாரக்க கீநெட்டிகல, பிணையில் விடுவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வு-(Photos)

vali0யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வுகள் 30.12.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2மணியளவில் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டடபத்தில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ..தெட்சணாமூர்த்தி அவர்களும் அவர்களது பாரியாரும் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வன.பிதா. கலாநிதி. டி.எஸ். சொலமன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக உலக தரிசன நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ஆர்.ஜே. அன்டனி மற்றும் தொழிலதிபர் திரு.ச.சுகந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். 

இவ் நிகழ்வானது வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடாந்து இடம்பெற்றது. ஆலயத்தில் இருந்து 100ற்றுக்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் வாத்தியம் முழங்க யாழ்பாணக் கல்லூரி சாரணர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து மங்கல விழக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் வித்தியாசாகரம் சிவஸ்ரீ. சபா. வாசுதேவக்குருக்கள் மற்றும் தென் இந்திய திருச்சபையின் மூளாய் தேவாலய பங்குத்தந்தை வண பிதா. செபஸ்டியன் அன்டனி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தலைமை உரையினை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கள் வழங்கினார்.
Read more

yaltheviகாங்கேசன்துறை புதிய ரயில் நேர அட்டவணை-

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை இடம்பெற்ற ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டதையடுத்து புதிய ரயில் சேவை அட்டவணையை யாழ். பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் வெளியிட்டுள்ளார்.

குளிரூட்டிய கடுகதி ரயில் 

காலை 5.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு 11.56 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.17 மணிக்கு மாவிட்டபுரத்தை சென்றடையும். பிற்பகல் 1.25 மணிக்கு மாவிட்டபுரத்தில் இருந்து புறப்பட்டு 1.42 மணிக்கு யாழ்ப்பணத்தை வந்தடைந்து 1.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கொழும்பை சென்றடைந்து அங்கிருந்து 8.31 மணிக்கு கல்கிசையை சென்றடையும். 

தயட்ட கிருள்ள (கடுகதி) ரயில் Read more

பிரசார நடவடிக்கைகள் தொடர்வதாக குற்றச்சாட்டு-

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கென இன்று முதல் 65 ஆயிரம் காவல்துறையினர் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 13 ஆயிரம் பணியாளர்கள் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றும் பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே தேர்தல்கள் தொடர்பில் தமது அமைப்பிற்கு ஆயிரத்து 358 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது.

நள்ளிரவிற்கு முன் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தல்-

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்துள்ளார். அதேபோன்று, அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் இன்று அகற்றப்பட வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினத்திற்குள் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கும் தவறும் கட்சி அலுவலகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்துள்ளார்.

வாக்குபெட்டி பஸ்களின் பின்னால் செல்ல வேட்பாளர்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி-

vaakkupettiதேர்தல் கடமைகளில் ஈடுபடும் பிரதிநிதிகளும், வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லும் பஸ்களின் பின்னால் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்கெண்ணும் நிலையத்தின் இறுதி பொலிஸ் காவலரண் வரையில் குறித்த பிரதிநிதிகள் செல்ல முடியுமென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார். அத்துடன், வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் முறையாக வகையில் இடம்பெறும். நாங்கள் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிப்போம். பெட்டி மாற்றப்படும் என்று இன்னும் யாரும் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்றால் தயவு செய்து அதனை கைவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும கூறியுள்ளார்.

அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது-தேர்தல் ஆணையாளர்-

identஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை மறுதினம் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களிக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைளுக்காக பிரதேச மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் அனந்தி வீட்டின்மீது கல்வீச்சு-

ananthiவடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக அனந்தி சசிதரன் தெரிவிக்கையில், சுழிபுரம் வழக்கம்பரையில் உள்ள எனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 1.30மணியளவில், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன, இதனையடுத்து உடனடியாக எழுந்து விளக்குகளைப் போட்டவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து பொலிஸாருக்கும், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், முறைப்பாடு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் நேற்று உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் ஒளிப்பரப்பாகியிருந்தது. அது தமது குரல் அல்ல என்றும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்ப கட்டணம் செலுத்தியவர்களின் விபரத்தை தரக்கோரியும், அனந்தி  ஒன்றை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தபால் மூலம் இன்றும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம்-

postதபால் மூலம் வாக்களிக்க தவறியோருக்காக இன்று விசேட வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதன்படி, வாக்காளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று தமது தபால் மூல வாக்குகளை வழங்க முடியும். காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையில் தபால் மூல வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு டிசம்பர் 23, 24 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டதுடன் தவிர்க்க முடியாத காரணங்களால் அன்றைய தினம் வாக்களிக்க தவறியவர்களுக்காக டிசம்பர் 30 ஆம் திகதியன்றும் விசேட வாக்களிப்பு நடத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகளுக்காக 26 ஆம் திகதியன்று தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அநேகமானோர் அன்றைய தினம் வாக்களிக்க தவறியமையினால் மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கும் முகமாகவே இன்றும் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.

ஆளுங்கட்சிக்கு தாவவில்லையென கூட்டமைப்பு உறுப்பினர்கள் மறுப்பு-

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா, ‘எனது தனிப்பட்ட தேவை காரணமாக நான் கொழும்பு சென்றிருந்த தருணத்தில், நான் கட்சி மாறுவதற்காக கொழும்பு சென்றுள்ளேன் என செய்திகள் பரவியுள்ளன’ என்றார். ‘இருந்தும் நான் கட்சி மாறவில்லை. பொய்ப் பரப்புரைகளில் எவரும் ஈடுபடவேண்டாம். நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்போம்’ என கூறியுள்ளார்.

எக்னெலிகொடவுக்காக அலரி மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரகம்-

alarimalaiஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் இம்மாதத்துடன் 5 வருடங்கள் நிறைவடையும் நிலையில் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறும் கோரி எக்னெலிகொடவின் குடும்பத்தாரும் சிவில் அமைப்புகளும் இணைந்து இன்று முற்பகல் அலரி மாளிகைக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்பு பிரதீப் எக்னெலிகொட காணாமல்போனதாக அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். அவர் அரச தரப்பினரால் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்திய அவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமது குடும்பம் பெரும் குடும்பச் சுமைகளையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எக்னெலிகொடவின் குடும்பத்தினருடன் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சுமார் 2 மணிநேரமாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்விடத்துக்கு வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ஜனாதிபதி வருகை தராததால் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுப்பட்டதாக தெரியவருகின்றது.