யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் திருமதி சஞ்சீவன் ராதிகா, தென்மராட்சி உடற்கல்வி, வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து தேவாரம், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்று பிரதம விருந்தினரால் விளையாட்டுப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல்வேறு போட்டிகள் நடைபெற்றதையடுத்து பழைய மாணவர் நிகழ்வு, தலைவர் உரை, விருந்தினர் உரை என்பன இடம்பெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.  நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பெரியார்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.