பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு, பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுதல்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவ்விமான நிலையத்திலிருந்து பிராந்திய சர்வதேச விமான பயணங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு ஒத்துழைப்பு தெரிவித்து இந்திய அரசினால் இலங்கை நாணயம் 300 மில்லியின் ரூபாவை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முனை (டேர்மினல்) மாற்றுதல், மின்சக்தி விநியோகம் பயன்பாட்டு சேவை மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.