சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன்(12) நிறைவடைகிறது. 19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்திற்கு அமைய 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி குறித்த இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய செயற்பட்டார்.

பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர ஆகியவர்கள் ஏனைய உறுப்பினர்களாவர்.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த போதும் புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் வரையில் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய புதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை புதிய ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படாத நிலையில் புதிய தலைவராக ஆணைக்குழுவின் தற்போதைய சட்ட செயலாளர் நிமல் ஜி புஞ்சிஹேவா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படுவார்கள்.

பின்னர் குறித்த பெயர்கள் பாராளுமன்ற சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் குறித்த சபையின் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.