கொவக்ஸ் (COVAX) வசதியின் கீழ் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 வைரஸ் தொற்றுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியை தயாரித்த பின்னர் குறித்த தடுப்பூசியை சமமாக நாடுகளுக்கிடையே விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கங்களும் குறித்த உற்பத்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய உலகளாவிய அணுகுமுறையே கொவக்ஸ் என அழைக்கப்படுகின்றது. அதன் கீழ் கொவிட் – 19 இற்கான தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதுடன் குறித்த தடுப்பூசியை அனைத்து நாடுகளும் பெற்றுக்கொள்வதற்காக நியாயமானதும் சமமானதுமான அணுகுமுறையை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையும் இக் கொவக்ஸ் செயன்முறையில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், கொவக்ஸ் வசதிகள் மூலம் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான தகைமையை எமது நாடு கொண்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் உள்ளடங்கலாக, GAVI நிறுவனம் (Global Alliance for Vaccines and Immunization) மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தடுப்பூசி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இரண்டு படிமுறைகளின் கீழ் விண்ணப்பங்களை கோருமாறு நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலக்குக் குழு மற்றும் தடுப்பூசியைக் களஞ்சியப்படுத்தும் இயலளவு தொடர்பாக தொழிநுட்பத் தகவல்கள் உள்ளடங்கிய தடுப்பூசி விண்ணப்பத்தின் முதலாம் மற்றும் A பகுதி 2020 திசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததுடன், இலங்கை குறித்த விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பித்துள்ளது. அதன் இரண்டாம் பகுதியான தடுப்பூசி பெறல் மற்றும் அதற்கமைவான முற்காப்பீட்டு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக 2021 சனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கமைய, சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி கொவக்ஸ் இற்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் B பகுதியை சமர்ப்பிப்பதற்கும், கொவக்ஸ் வசதிகள் மூலம் தடுப்பூசி வகைப்பிரித்து வழங்கும் பட்சத்தில் குறித்த தயாரிப்பாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.