வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, திருகோணமலை, அலஸ் தோட்டம், இறை இரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (04) காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம், சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என இதன்போது கேள்வியெழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியவாறு உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒரு சட்டமும் சிறுபான்மையினருக்கு ஒரு சட்டமும்  இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.