ரஷ்யா மீது இன்னும் பல தடைகளை விதித்து, “நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம்” என உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்ப்போருக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரோசியா 24 எனும் செய்தி சேனலில் ஒளிபரப்பான அரசு கூட்டத்தில் புடின் பேசினார்.

அதில், “எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக எங்களுக்கு எவ்வித தீய நோக்கங்களும் இல்லை” என புதின் தெரிவித்தார்.

மேலும் “உறவுகளை மேலும் மோசமாக்கும்” வகையிலான கூடுதல் நடவடிக்கைகளை அண்டை நாடுகள் எடுப்பதற்கான “எவ்வித அவசியமும் இல்லை” என தங்கள் அரசு கருதுவதாக அவர் தெரிவித்தார்.

“உறவுகளை எப்படி இயல்புநிலைக்குக் கொண்டு வருவது, ஒத்துழைப்பது மற்றும் உறவுகளை மேம்படுத்துவது குறித்துத்தான் அனைவரும் சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யா மீதான அழுத்தத்தை எப்படி தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்க, மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் கூடியுள்ள நிலையில், புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை ரஷ்ய ராணுவம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும், “ரஷ்யாவுக்கு எதிரான சில வெறுப்பு நடவடிக்கைகளின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டன” என்ற தன் முந்தைய கூற்றை மீண்டும் புதின் கூறினார்.