நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் CCTV கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். Read more
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் இன்று (05) பிற்பகல் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலவசக் கல்வி – இலவச சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப் (Shehbaz Sharif) பதவியேற்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி (Arif Alvi), ஷெபாஸ் ஷெரிஃப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கத்தினூடாக பொறுப்பேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தை கடனுடன் விற்பனை செய்ய முடியாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் நேற்று(04) அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. தமது சம்பளம் குறைக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் K.D.D.பிரசாத் தெரிவித்துள்ளார். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் சாதகமான பதில் கிடைக்கப்பெறாமையின் காரணமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.