ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (23.03.2024) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சியின் நிர்வாக விடயங்கள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினம் இன்று வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. வீட்டுக் கிருத்திய கிரியைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தோழர்.ஆர்.ஆர் இன் பெயரில் அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், ‘பொதுமக்களுக்கான இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கும் நிலையமும்’ திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அவரது நினைவாக தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு சிற்றுண்டி குளிர்பானம் வழங்கப்பட்டதோடு, மதிய போசனமும் வழங்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளார். குறித்த முறைப்பாட்டை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். அதன்போது ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கும் கருத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய நிதியுதவியையும் இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது வெற்றி எனவும் பிரதமர் தெரிவித்தார். அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்ததாக பிரதமர் தெரிவித்தார். நாடு வளர்ச்சியை நோக்கிய நிலையான பாதையை அடைந்துள்ளதால், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் கூறினார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த நாட்டு பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் தினேஸ் குணவர்தன எதிர்வரும் 30ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே அதனை பெற்றுக்கொடுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வௌிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென அவர் கூறினார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கிரிஸ்டல் சிம்பனி என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 186 பயணிகளும் 429 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் வந்துள்ளனர். அவர்கள் கொழும்பு மற்றும் காலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.