Header image alt text

வடமாகாணத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்; வலியுறுத்தல்

SAM_9712 SAM_9715 SAM_9718 copyகடந்தவாரம் (30.10.2013) வவுனியாவில் வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கி.தேவராசா தலைமையில் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போனோரின் பெற்றோர்கள் உறவினர்கள் சமுகமளிப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு நாட்டில் வர்த்தகர் சங்கம், ஆசிரியர் சங்கம், கலை இலக்கிய சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் என்று பல சங்கங்கள் இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் காணாமல் போனோர் சங்கம் உருவாகும் அளவுக்கு நாட்டின் மனித உரிமை நிலைமைகள் இருப்பது வேதனையளிக்கிறது. இத்தகைய சங்கங்கள் நாட்டில் உருவாக விடக்கூடாது என்பதே அரசின் கடும்போக்கான நிலைப்பாடாகும். ஆனால் காணாமல் போனோர் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறா தன்மையும், நாளுக்கு நாள் காணாமல் போனோர் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும் நிலைமையுமே காணாமல் போனோர் சங்கங்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. சிறீலங்கா அரசானது காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்து, காணாமல் போனோரை கண்டுபிடித்து உறவினர்களுடன் இணைத்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமளிக்கும் போதே இத்தகைய சங்கங்கள் அற்றுப்போகும். 
உழைத்து தமது குடும்பத்தின் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய வயதில் பல இளைஞர் யுவதிகளும், குடும்ப தலைவர்களும் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை நம்பி தங்கி வாழும் நிலையிலிருந்த பல குடும்பங்கள் இன்றும் கூட மீள முடியாத வறுமை நிலையிலுள்ளன. இக்குடும்ப அங்கத்தவர்கள் கண்ணீரோடு படுத்து கண்ணீரோடு எழும் நிலைமை வழமையாகி விட்டது. 
இதுவரை காலமும் இந்த குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு அரசோ, அன்றி அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களோ எத்தகைய முழுமையான நிகழ்ச்சி திட்டங்களையும் முன் வைக்கவில்லை. எனவே கூட்டமைப்பால் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணசபை அரசு இந்த குடும்பங்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பல குடும்பங்களுக்கு துளிர் விட ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணசபையின் அமைச்சுகளூடாக வாழ்வாதார உதவி திட்டங்களையும், புதிய தொழில் வாய்ப்புகளையும் வழங்கும் போது காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்தால் இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை அடைய முடியும்.
அதேவேளை இறுதி யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு இன்றும் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழுந்து வர முடியாத குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்குமென்று விசேட செயற்றிட்டத்தை ஏற்படுத்தி தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வடமாகாணசபையூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா – காரைநகர் நேரடி பஸ் சேவை-

வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ்சேவை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் தடவையாக இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் டிப்போவின் உதவி செயலாற்று முகாமையாளர் சிவசுந்தரம் கனகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் குறித்து இரு நாட்டு கடற்படை பேச்சு-

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில், இரண்டு நாடுகளதும் கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தியாவின் சுஹன்யா என்ற கப்பலில் வைத்து, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற சர்வதேச எல்லை பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் இவு;விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் தங்களின் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரமாக மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதல் விபத்து-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் முதலாவது வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. 19ஆவது மைல்கல் அருகில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக கார் வழுக்கிச் சென்று மதில் சுவர்களில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதியில் ஆட்டோவில் பயணித்தவர் கைது-

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில ஆட்டோவில் பயணித்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிவேக வீதியில் கடமையில் இருந்த அதிகாரிகளால் குறித்த ஆட்டோ சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிவேக வீதியில் ஆட்டோக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.