அனுமதி மறுக்கப்பட்ட தரம் 6 மாணவனுக்கு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து, தந்தையொருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைபாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருந்தது. விசாரணையின் நிறைவில், கிளிநொச்சி நகரில் பழைய கச்சேரிக்கு பின்புறமாக வசிக்கின்ற த.குயிலன் என்ற மாணவனுக்கு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்குமாறும் அதுவே நியாயத் தன்மையானதும் என்று தெரிவித்து, குறித்த மாணவனை எதிர்வரும் 17ஆம் திகதியன்று பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுதியுள்ளது. குறித்த மாணவன் தரம் 5 வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஆவார்.