இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறாததை தடுப்பதற்கான யுத்தத்திற்கு பிந்திய பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 2009 உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது 58வது படைப்பிரிவின் தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா சர்வதேச மனிதாபிமான சட்ட மனித உரிமை சட்டமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள படையணியின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக காணப்பட்டார் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை மிகமெதுவாகவே நிறைவேற்றி வரும் தருணத்திலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிற்கான இழப்பீடு குறித்த விடயங்களில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தை எட்டியிருந்தாலும் யுத்த குற்றங்களை விசாரணை செய்வது,போதுமான ஆதாரங்கள் காணப்பட்டால் சந்தேகநபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்து அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. நீதி மற்றும் பாதுகாப்புசீர்திருத்தம் தொடர்பான தனது வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது