சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14-01-2019) 7 மணியளவில் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று நேற்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தில் மணல் கடத்தி சென்றுள்ளனர். அவர்களை கொடிகாமம் பகுதியில் பொலிஸார் வழிமறித்துள்ளனர். எனினும் குறித்த கடத்தல் காரர்கள் உழவியந்திரத்தால் பொலிஸாரை தாக்கியுள்ளனர். இதன்போது பொலிஸார் சுதாகரித்துக்கொண்டதையடுத்து உழவியந்திரத்தில் வந்த மணல் கடத்தல்காரர்கள் இருவரும் உழவியந்திரத்தை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைவிட்டுச் சென்ற உழவியந்திரத்தை மணலுடன் கொடிகாமம் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளதோடு தப்பிச்சென்ற கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் நான்கு தடவைகள் கொடிகாமம் பொலிஸார் மணல் கடத்தல்காரர்களை கைது செய்யச் சென்ற போது பொலிஸார்மீது தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.