நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது. போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.

இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க தொடங்கின. நேற்று முன்தினம் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2வது நாளாகவும் போர் நீடித்தது.

இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்து உள்ளது. எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் இன்று அறிவித்து உள்ளது.

ரஷ்ய படையெடுப்பினால், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷ்ய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும், உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வெளியே ரஷ்ய ராணுவ படையை சேர்ந்த, பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் வாய்ந்த வாகனம் ஒன்று அழிக்கப்பட்டும், அதன் பக்கத்தில் ஆடை முழுவதும் பனி படர்ந்தபடி வீரர் ஒருவரின் உடல் கீழே விழுந்து கிடப்பது போல புகைப்படமும் வெளியிடப்பட்டு உள்ளது.