முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி ஏற்றியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், தேசிய அளவிலான பொது சுகாதார நிறுவனத்தால், சுற்றுலா பயணிகளின் பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்ட பொருத்தமான தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கை சுற்றுலா பயணிகள், பிரித்தானியாவிற்கு வருகை தருவதற்கு முன்னர், 48 மணித்தியாலத்திற்குள் பயணிகளுக்கான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், இரண்டாவது நாள் முடிவடைவதற்கு முன்னர், COVID-19 பரிசோதனைக்கான கட்டணமும் செலுத்தியிருத்தல் அவசியமாகும்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.

பிறிதொரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிப்பவர்கள், பிரித்தானியாவை சென்றடைந்தவுடன் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.