முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன், வெலிஓயா பகுதியில் உள்ள நில அளவைத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வந்து, எல்லைக் கற்களை நாட்டியுள்ளார்கள்.  இதனை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களையும் அகற்றவைத்துள்ளார்கள்.

கொக்குத்தொடுவாய் பிரதேசத்துக்கு உட்பட்ட கோட்டைக்கேணி பிள்ளையார்  கோவில், அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி, சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே மேற்படி எல்லை கற்கள் நாட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து மக்கள், முன்னாள் வடமாகாண சபை  உறுப்பினர் து. ரவிகரனுக்கு முறையிட்டதுடன் அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர்.

இன்னிலையில், திங்கட்கிழமை (19) கரைதுறைப்பற்று பிரதேச செயக உத்தியோகத்தர்கள், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பிரசன்னமாகிய நிலையில், குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் வருகை தந்துள்ளார்கள்.

இந்த எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்கள் மக்களின் உறுதிக்காணி என்பதை மக்கள் மற்றும் கமக்கார அமைப்புகள் தெளிவு படுத்தியதுடன் அவர்கள் போட்ட கற்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.