Header image alt text

News

Posted by plotenewseditor on 21 June 2013
Posted in செய்திகள் 

13ஐ மாற்றவோ நீக்கவோ இந்தியா அனுமதிக்காது-சுரேஷ் எம்.பிsuresh

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் ஏற்பாடான 13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ அனுமதிப்பதில்லையென இந்தியா உறுதியளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிராந்தியம் என்ற சரத்து அடங்கிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமெல்லை என்று இந்திய தலைவர்கள் தெரிவித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தத்தை ஆராயும் குழு உறுப்பினர்கள் விபரம்- parliament

13வது திருத்தச் சட்ட மாற்றம் குறித்து ஆராயவென அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா ஆளும்கட்சி உறுப்பினர்கள் குழுவின் தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் அறிவித்துள்ளார். குழு உறுப்பினர்களின் பெயர்களாவன, நிமல் சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிறிசேன, ஜி.எல்.பீரிஸ், டபிள்யு.டி.ஜெ.செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, தினேஸ் குணவர்த்தன, சுசில் பிரேமஜெயந்த், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.ஏ.எம்.அதாவுல்லா, டியு.குணசேகர, ரிஷாத் பதியூதின், பாட்டளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரசன்ச, பசில் ராஜபக்ஷ, லக்ஷமன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, முத்து சிவலிங்கம், ஜானக பண்டார, சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே ஆகியோராவர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் யாப்பு ஆளும் கட்சியிடம் சமர்ப்பிப்பு-unp

ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பு, இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்நாயக்கவினால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச அரசியல் யாப்பில், மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் போன்ற விடயங்களில் சீர்த்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம்-

sri &indiaஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அடுத்தமாத நடுப்பகுதியில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சிவ்சங்கர் மேனன் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரென்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பிலான திருத்தங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை ஜனாதிபதியுடன் அவர் பகிர்ந்துக் கொள்வாரென்றும் கூறப்படுகின்றது.

பேர்லினில் இலங்கை நிலைவரம் குறித்து ஆராயும் மாநாடு-

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ஆராயும் வகையில் ஜேர்மன் தலைநகரான பேர்லினில் விசேட மாநாடொன்று நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரனும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகள் அடங்கிய அடையாள அட்டை- 

தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்,நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைச்செய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சலீம் மர்சூப், பிரியசத் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று  20 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே. இலத்திரனியல் அடையாள அட்டையை மும்மொழிகளிலும் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. இவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக,தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் இல்லை.
அரசியலமைப்பின் 18 ஆவது,19 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22 வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை நேற்றைய விசாரணையின் போதே பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பெருமளவு சட்டவிரோத செல்போன்கள் மீட்பு-pohon

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான 149 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 184 வாசனைத் திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் விமானநிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. டுபாயிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரினால் இப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக  சுங்கப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீர்வை வரி நிவாரணமொன்று வழங்கப்படுவது வழமை என்பதால் அவர்களின் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு தொண்டராசிரியர்களுக்கு நியமனம்-

கிளிநொச்சி மாவட்ட மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலர் சீ.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். இந்நியமனங்கள் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிறுகாலை 9 மணிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, மடுவலய  ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்ட 5 வாகனங்கள் வடக்கில் மீட்பு

கொழும்பு, நுகேகொட பகுதியில் வைத்து சுமார் ஒரு வருடத்திற்கு முன் வாடகைக்கு அமர்த்தப்பட்ட 04 கார்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்று என்பன யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலீசார் அறிவித்துள்ளனர். வாடகைக்கு அமர்த்தப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரண்டரை கோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நுகேகொடை குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.

4.1 செக்கன்களுக்கு ஒருவர் அகதியாவதாக யூ.என்.எச்.சீ.ஆர் அறிவிப்பு-unhcr

2012ஆம் ஆண்டு 4.1 செக்கன்களுக்கு ஒருவர் தனது வீட்டைவிட்டு துரத்தப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சீ.ஆர்) சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் அகதிகள் குறித்து யூ.என்.எச்.சீ.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 1.1 மில்லியன் மக்கள் சர்வதேச எல்லையை தாண்டி ஓடியுள்ளனர். 6.5மில்லியன் மக்கள் தமது நாட்டினுள்ளே இடம்பெயர்ந்தவர்களாக காணப்பட்டனர். அதேயாண்டு மொத்தம் 45.2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த ஆண்டு உள்நாட்டில் மட்டும் 28.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 15.4 மில்லியன் பேர் நாட்டு எல்லையை தாண்டிய இடம்பெயர்ந்தவர்களாக காணப்பட்டனர். அதுமட்டுமன்றி 2012ல் 93,700பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாக காணப்பட்டனர். இடம்பெயர்வுக்கு பிரதான காரணமாக யுத்தமே உள்ளது. இடம்பெயர்ந்தோரில் 55சதவீதமானோர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என யூ.என்.எச்.சீ.ஆரின் குறிப்பிட்டுள்ளது.

 ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கைக்கு போதிய கரிசனை கிடையாது-அமெரிக்கா-usa

சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையரசு போதிய கரிசனை செலுத்தத் தவறியுள்ளதாக ஆட்கடத்தலை தடுப்பது தொடர்பான அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஆட்கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலது குறைந்த ஆதரவற்ற சிறுவர்கள் போன்றே முதியவர்களும் சட்டவிரோதமாக யாசகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனைத் தவிர கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க நகரங்களில் வீட்டு வேலைகளுக்கும் உலர் வலயத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கும் கடற்றொழிலுக்கும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். உள்ளக இடம்பெயர்வுக்குள்ளானவர்கள் மற்றும் யுத்தத்தால விதவையாக்கப்பட்ட பெண்களும் அதிகளவில் ஆட்கடத்தலுக்கு இலக்காகின்றனர். இதேவேளை வீட்டு வேலைகளுக்காகவும் ஆடைத் தொழிற்சாலை மற்றும் நிர்மாணத்துறை வேலை வாய்ப்புக்களுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பணியாளர்கள் அங்கு வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்போது அவர்கள் உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர் என சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கான அமெரிக்க நிறுவனம் தனதறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

சரியான வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

Sithar ploteவட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின்  உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு  நிற்கின்ற ஒரு வேட்பாளரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவை பின்வருமாறு,
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மன்னாரில் முஸ்லீம் மக்களையும், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்களையும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களி;ல் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மாவட்டமாக மாறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அண்மையில் வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில்கூட சிங்கள குடியேற்றங்கள், இராணுவக் குடும்பங்களுக்கான குடியிருப்புக்கள் போன்றன அமைப்பது இந்த குடிப்பரம்பலை மாற்றும் வேலையாகவும் அமையலாம். இது தொடர்பில் ஐரோப்பிய தூதுவர்களுக்கு நாம் தெரிவிக்கும்போது,அதன் தார்ப்பரியத்தை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்களில்லை. அரசாங்கம் தற்போது எதற்கெடுத்தாலும் தெரிவுக்குழு என்று சொல்லி வருகின்றது. இந்த தெரிவுக்குழுவிலும் நியாயம் கிடைக்கும் என சொல்லி வருகின்றது. இதற்குள் கூட்டமைப்பு சென்று இதில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும். தெரிவுக்குழுவில் நியாயமான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளது. புத்திசாதுரியமாக செயற்படுவதாக நினைத்துக் கொண்டிருந்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு செல்லாது. சர்வதேசத்தின் தலையீடுகள் நிச்சயம் இருக்கும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டித் தீர்வே தேவை. எவ்வாறாயினும்  தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. 1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என சொல்லுமளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.
தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களின்  இந்தச்  செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாக அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது.
இன்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அது எவ்வளவு நடமுறைச் சாத்தியமானது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிலவேளைகளில் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் சீனாவைக் காட்டியே மஹிந்த ராஜபக்ஷ தனது காரியங்களை நடத்தி வருகின்றார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை எம்மிடம் வழங்கியிருந்தார். அதற்கு எதிர்மாறாக அவர் இப்போது செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தினையும் புலிகளையும் காட்டி சிங்கள மக்களை தன்வசப்படுத்தி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற தீர்வாக சமஷ்டி தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால், அது வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான வாய்ப்பைக் கொடுத்துவிடும். வட மாகாணசபை தேர்தலில் அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பலத்தினைப் பெறவேண்டும்.
உள்ளுராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளே காரணமாக அமைகின்றன. உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினைப்படுவதினாலேயே உள்ளுராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது. அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே மிகவும் அவசியமானதாகும். சரியான முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெறும். தற்போது கூட்டமைப்பிற்குள்ளான ஒற்றுமை போதாது. எனவே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதற்கான சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின் உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு நிற்கின்ற ஒரு வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.

1600 இலங்கை அகதிகள் நாடு திரும்பல்-

கடந்த ஆண்டில் 1600 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யூ.என்.எச்.சீ.ஆர்) தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். போர் நிறைவடைந்த பின்னர் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருகின்றனர். 2010ம் ஆண்டில் 2040 பேரும், 2011ம் ஆண்டில் 1670 பேரும் இவ்வாறு இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவன் வீடு திரும்பவில்லையென முறைப்பாடு-

வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 11ல் பயிலும் சிவசூரியகுமார் ஜனராஜ் என்ற மாணவன் கடந்த 13ம் திகதி காலை பாடசாலை சென்ற நிலையில் காணாமற் போயுள்ளதாகவும், இதுவரை இம்மாணவன் வீடு திரும்பவில்லையெனவும் குறித்த மாணவனின் பெற்றோரால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு கோரிக்கை-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிரந்தரமான ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தியுடன் வடபகுதியில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 22வீதமான அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை-

மன்னார், காலி ஊடாக பொத்துவில் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை வரையிலுமான கடற்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடலில் பிரயாணத்தை மேற்கொள்வோர் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

 தனியார் பஸ்களில் ஜீபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை-

தனியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்றாடம் இடம்பெறும் பஸ் அனர்த்தங்களை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கைய மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன கூறியுள்ளார். ஜீபி.எஸ் எனும் நவீன கருவி மூலம் வாகனங்களின் வேகம் ஆணைக்குழுவினால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் சுமார் 3200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில், 678 பஸ்களில் மாத்திரம் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்தமாத இறுதிக்குள் மேலும் ஆயிரம் பஸ்களில் மேற்படி கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு-

எதிர்வரும் நவம்பர்மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் குழுவினருடனான நேற்றைய சந்திப்பின்போது அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலாட் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மாநாடு சிறப்புற ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். 

 இரு மாகாண சபைகள் கலைப்பு-

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பத்தில் கலைக்கபடலாம் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இந்த மாகாணசபைகள் ஜுலை 5ம் திகதி கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலும், குறித்த இரு மாகாண சபைகளுடன் சேர்த்து ஒன்றாக நடத்தப்படுமென்று கூறப்படுகிறது. இந்த தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் அல்லது இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கே.பத்மநாபா அவர்களின் 23ஆவது நினைவுதினம்-

eprlf

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி  (ஈ.பி.ஆர்.எல்.எப்)யின் முன்னாள் செயலாளர் நாயகம் கே.பத்மநாபாவின் 23ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போராட்ட காலத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில்  புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் அலுவலகத்திலும் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வடக்குத் தேர்தலில் 714,488 பேர் வாக்களிக்கத் தகுதி-

election office

வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7லட்சத்து 14ஆயிரத்து 488பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் 07ஆம் திகதி நடாத்தப்படலாமென்ற எதிர்ப்பார்ப்பில் தேர்தலை நடாத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 38 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட சபையாக வட மாகாணசபை அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பின் அடிப்படையின் யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 589 பேரும், வவுனியா மாவட்டத்தில் 96 ஆயிரத்து 702 பேரும், மன்னார் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 85 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஆயிரத்து 409 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் குறித்து அடுத்தமாதம் தீர்மானம்-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் அடுத்த மாதம் கோரப்படலாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெரும்பாலும் செப்டம்பர் மாத டுப்பகுதியில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் கருத்துரைக்கையில், பெரும்பாலும் செப்டம்பர் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரங்களில் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறலாம் எனவும்,. குறித்த மாகாணசபைகளை கலைப்பதாக வர்த்தமான அறிவித்தல் வெளியாகி ஒருவார காலப்பகுதியில், வேட்பு மனு கோரப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

 கடந்தாண்டு அகதிகள் எண்ணிக்கை உயர்வு-

unoஅகதிகளின் எண்ணிக்கை 1994 ஆம் ஆண்டிற்கு பின் கடந்த ஆண்டு உயர்ந்த மட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சிரியா முக்கியமான புதிய காரணமாக அமைந்துள்ளதென ஐ.நா சபை அறிவித்துள்ளது. 55வீதமான அகதிகள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். உலகளாவிய ரீதியிலுள்ள 81 வீதமான அகதிகள் அபிவிருந்தி அடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

 இடம்பெயர்ந்தோர்க்கான வாக்காளர் பட்டியல் இரு வாரங்களில் தயார்-

election boxஇதுவரையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதிவு செய்யப்படாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான மேலதிக வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் இரு வாரங்களில் தயாராகும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இம்பெயர்ந்த நிலையில், 2012ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் வகையிலான விசேட சட்டதிருத்தம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட விண்ணப்பம் ஒன்று தேர்தல்கள் செயலகத்தினால் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸி செல்ல முயன்ற ஒரு தொகுதியினர் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற சிலர் இன்றுகாலை கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்புக்கு கிழக்காக பயணித்தபோதே இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இன்றுகாலை திருகோணமலையிலிருந்து அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவிருந்த நிலையில் இக்குழுவில் இருந்த 80 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமகால நிலைமைகள் குறித்து இந்திய பிரதமருக்கு விளக்கம்-

tnaதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் நேற்றுமாலை இந்திய் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் ஆகியோரைச் சந்தித்து இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் தன்மை உட்பட பல விடயங்கள் குறித்து தாம் முன்வைத்த கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் தாம் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பெண் விரிவுரையாளர்மீது கொழும்பில் தாக்குதல்-

கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூரிய ஆயுதத்தினால் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான தமிழ்ப் பெண் விரிவுரையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சட்ட பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சயனைட் அருந்திய குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி-

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயன்ற ஒருவர், யாழ்ப போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை, குருசுமதவடி, சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே நேற்றிரவு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலீசார் நபரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென கூறியுள்ளார். சயனைட் கடித்த குடும்பஸ்தர், சுயநினைவற்ற நினையில் இருப்பதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவருக்கு நினைவு திரும்பியதும் சயனைட் குறித்து விசாரிக்கப்படுமென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய விதிமுறை

வெளிநாடு செல்லும் பெண்களுக்காக புதிய விதிமுறைகள் அடுத்த மாதம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள உத்தியோகத்தர் மூலம் வெளிநாடு செல்வோரின் குடும்ப நிலைமை மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரின் கையொப்பமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்த அறிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்மார் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வதால் அவர்களது பிள்ளைகளும் குடும்பமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஊடகங்களை ஒடுக்கும் ஒழுக்க விதிகள் அறிமுகம்-

புதிய ஊடக ஒழுக்கவிதியானது பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சினால் ஊடக ஒழுக்க விதிக் கோவையொன்று அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் புதிய ஒழுக்க விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, குறிப்பாக அரசாங்கத்தை விமர்சனம் செய்யும், மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை அடக்கும் நோக்கிலேயே புதிய ஊடக ஒழுக்கவிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கணகாணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

போகம்பறை சிறையை அரசிடம் ஒப்படைக்க தீர்மானம்-

கண்டி போகம்பறை சிறைச்சாலையை டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறையிலுள்ள கைதிகள் பல்லேகலே மற்றும் பூஸா சிறைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அமைச்சின் செயலர் பி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். இதுவரையில் கண்டி – போகம்பறை சிறையிலிருந்த 400 விளக்கமறியல் கைதிகள் பல்லேகலே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நகரங்களிலிருந்து சிறைச்சாலைகளை அகற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

News

Posted by plotenewseditor on 18 June 2013
Posted in செய்திகள் 

19ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதில்லை-அமைச்சர் ராஜித-

6-Rajitha

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் இரு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமையின்கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியும் என்ற சட்டம் தற்போது இறந்துபோய் விட்டது. எனவே அதனை நீக்குவதற்கு முயற்சிப்பதை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதை ஆதரிக்க முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் மன்மோகன் சிங் கடிதம்-

manmogansingh

13ஆவது அரசியல் அமைப்பை திருத்துவதற்கு இலங்கையில் கட்சிகள் முயற்சித்து வருவது தொடர்பாக இந்தியா, தனது கருத்தை இலங்கைக்கு தெரிவிக்கும் என இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்குள் கட்சிகள், தமது தீர்மானத்தை எடுத்துள்ளன. எனினும் இந்தியா, இது தொடர்பில் ஆராய்ந்து தமது கருத்தை தெரிவிக்கும் என இந்தியப் பிரதமர், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியா செயற்படும். அனைத்தின மக்களுக்கும் சகல உரிமைகளும் கிடைக்கக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது-அமைச்சர் சம்பிக்க-

Jathika Hela Urumaya

 இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டன. இனி அதுகுறித்து எவ்வித பேச்சுக்கும் இடமில்லை. தொட்டதற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினருக்கும் பொருந்தும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக ரணவக்க நேற்று தெரிவித்துள்ளார். வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தமிழீழக் கனவை இல்லதொழிக்க சகல வகையிலும் போராடுவோம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 66 ஆயிரம் பேரை பலியெடுத்தே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைசாத்திட்டார். இது முழுஅளவில் இலங்கையின் சட்டம் மற்றும் மக்கள் ஆணையைமீறி மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கத்திலிருந்து ஆரம்பமான புலிகளின் தாக்குதல்மூலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது முறையல்ல என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தமிழர்கள்மீது தாக்குதல்-

singam puli

 இங்கிலாந்தில் ஐ.சி.சி கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி லண்டன் ஓவல் மைதானம் அருகே இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மேற்படி போராட்டத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

சிங்கள ராவயவின் பேரணி ஆரம்பம்-

sinhala Ravaya

 மிருகவதை மற்றும் மத பரப்புரைகளுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. தங்காலை நகரில் பேரணியை ஆரம்பிக்கப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் இடைநடுவே, நகரிலுள்ள மாட்டிறைச்சி கடை தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் ஊடகப்பேச்சாளர் மாகல் கந்த சுதந்த தேர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு-

கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30மணியளவில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 01ஆம் ஆண்டு விஞ்ஞானபீடத்தில் பயிலும் 23 வயதான மாணவியே உயிரிழந்துள்ளார். நேற்றுகாலை 9.30அளவில் பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து அவர் கீழே குதித்துள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஒலுவில் துறைமுகம் ஜூலையில் திறப்பு- அம்;பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன்கருதி ஒலுவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். திகாமடுல்ல மாவட்ட எம்.பி பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்-

fisch bort இலங்கை சிறையிலுள்ள 57 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய பிற காரணங்களை கருத்திற்கொண்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இலங்கை சிறையிலுள்ள 57 மீனவர்களையும் விடுதலை செய்ய இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்க தலைவர் யேசுராஜா தெரிவித்துள்ளார். இதனிடையே, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர் சங்கம் சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News

Posted by plotenewseditor on 17 June 2013
Posted in செய்திகள் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமருடன் பேச்சு-

tnaபுதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்திய அரசின் அழைப்பின்பேரில், தமிழ்த் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா சென்றுள்ளனர். இவர்களை இன்று இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளையும் இவர்கள் சந்திக்கவுள்ளனர். நாளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரையும் இவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியர் சிவசங்கர் விடுதலை-

law helpகடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு மொழிபெயர்ப்பிற்காக சென்றிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியக் கலாநிதி இரட்ணசிங்கம் சிவசங்கர் இன்றுகாலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர்மீது ஒலிப்பதிவு நாடா வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கடந்த ஆறு மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜாவினால் இவர் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சர்கள் மாநாடு-

பொதுநலவாய நாடுகளின் மகளிர் விவகார அமைச்சர்களின் 10வது மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. தொழில் முயற்சிகளுக்காக பெண்களின் தலைமைத்துவம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 19ஆம் திகதிவரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. இம்முறை மாநாட்டில் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்சார் பெண்கள் சம்மேளனத்தின் தலைவர் பெட்ரா மிரக்ரலிஸ் தலைமையுரை நிகழ்த்தவுள்ளார். டாக்காவில் இன்று ஆரம்பமாகும் மாநாட்டில் இலங்கை சார்பில் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன படகுகளின் பிரசன்னத்திற்கு மீன்பிடி அமைச்சு மறுப்பு-

srilanka flag

சீன மீனவப் படகுகள் இலங்கைக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சு மறுத்துள்ளது. அந்த மீனவப் படகுகள் சில சமயங்களில் இலங்கை கடற்பிராந்தியத்தில் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பெரும்பாலும் சீன மீனவப்படகுகள் இலங்கை தேசிய கொடியுடன் சஞ்சரிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

ராஜித, வாசுதேவ, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-பொதுபல சேனா-

Bodu_bala sanaராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருக்கு தேவையான வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்துச்செல்ல இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேற்படி அமைச்சர்களின் அரசியல் வாழ்க்கையை நாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அத்துடன் வாசுதேவ, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் நாட்டு மக்களின் உரிமைகளை கொள்ளையிட இடமளிக்கக் கூடாது. பிரிவினைவாத இடதுசாரி அணியில் இருக்கும் சிலர், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை எனக் கூறுகின்றனர். அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு கூறுகின்றனர். அதற்காக அவர்கள் குரல் கொடுப்பார்களாம். முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று நாங்கள் சவால் விடுக்கின்றோம் என கலகொட அத்தே ஞானசாரதேரர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நாவின் இலக்கினை அடைந்த 38 நாடுகள்-

unoபட்டினியை அரைவாசியாகக் குறைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கினை 38 நாடுகள் எட்டியுள்ளன. 2015ஆம் ஆண்டிற்குள் பட்டினியை அரைவாசியாக குறைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. ஐ.நா பொதுச்சபையினால் அறிவிக்கப்பட்ட 2000ஆம் ஆண்டு மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இலக்குகளின் பிரகாரம் முதலாவதாக கடுமையான வறுமை மற்றும் பட்டினியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலைதீவு, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளும் இதில் உள்ளடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அல்கய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு தடை-

thalipanஅல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவி;த்தலை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல்கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இப் பட்;டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அல்கய்தா மற்றும் தலிபான்களின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்-

கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கு புதிய பதில் பிரதி பொலீஸ் மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்;.குணவர்தனவே பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமையேற்றுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளனர். அவர்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும்நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நியமனம்-

LK policeஉப பொலிஸ் பயிற்சி முடித்த 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயிற்சி நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 60 தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றுவந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களாக பயிற்சிபெற்ற மேற்படி தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றுடன் பயிற்சியை நிறைவு செய்துகொண்டு, இன்று யாழ்ப்பாணத்துக்கு நியமனம் பெற்று வருகை தரவுள்ளனர் என அவர் கூறியுள்ளார். இவர்கள் வட மாகாணத்தில் கடமையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 உயர் நீதிமன்ற தகவல்கள் கணனிக்கு மாற்றம்;-

உயர் நீதிமன்ற தகவல்கள் கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பான தரவுகள் இவ்வாறு கணனி மயப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் இலத்திரனியல் முறையில் வழக்குகளை பதிவுசெய்ய முடியும். நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். எனவே  நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றம் ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதம நீதியரசர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க விசேட திட்டம்-

sri india mapஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய இலங்கை கடல் எல்லைக்கு அருகில் முன்னெடுக்கப்படுகின்ற ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்கு இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்படும் படகுகளை நிறுத்தி மீண்டும்  இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதனைத் தவிர இந்திய மீனவர்களின் படகுகளில் அந்த நாட்டின் தேசிய கொடிகளை பறக்கவிட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மீனவ படகுகளில் பதிவு இலக்கங்களும் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என மீனவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்ஜிய ஜனாதிபதியின் பாரியாரும் புதல்வரும் இலங்கை வருகை-

ஜோர்ஜிய நாட்டு ஜனாதிபதியின் பாரியார் சன்ரா எலிஸபெத் மற்றும் அவரது புதல்வரும் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்றுகாலை 8.30 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் இங்கு தங்கியிருந்து இரு நாடுகளுக்குமிடையிலான சுகாதாரம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

News

Posted by plotenewseditor on 16 June 2013
Posted in செய்திகள் 

பயங்கரவாத இலட்சினைகள், கொடிகளை தடைசெய்ய கோரிக்கை-

பயங்கரவாத அமைப்புகளின் இலட்சினைகள், கொடிகள் மற்றும் தொனிப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஏகப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். ஐ.நா சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை அணுகி, வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள இடமளிக்கக்கூடாது. அத்துடன் சர்வதேச ரீதியாக பங்கரவாதத்தை தோற்கடிக்க சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புனரமைக்கப்பட்ட ஏ9 பாதை திறந்துவைப்பு-

மீள புனரமைக்கப்பட்ட கல்குளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ 9 பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக, 20 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 153 கிலோமீற்றர் நீளமான பாதையே இவ்வாறு புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புலிகளால் நிர்மாணிகப்பட்ட இரணைமடு விமான  ஓடுதளம் மறுசீரமைக்கப்பட்டு ஜனாதிபதியால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

சுயாதீன ஆணைக்குழுவுக்கு வலியுறுத்தல்- 

உடனடியாக சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதனிடையே, 17வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சகல சீர்த்திருத்தங்களுக்கும் முன்னர், இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

துப்பாக்கி வெடித்து பொலீஸ் உத்தியோகத்தர் காயம்-

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றுமாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த பொலீஸ் உத்தியோகஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நந்தன என்ற பொலீஸ் உத்தியோகத்தரே காயமடைந்துள்ளார். மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திவரும் கைத்துப்பாக்கியே இவ்வாறு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்க் கைதிகளை வடக்கு, கிழக்கு சிறைகளுக்கு மாற்றக் கோரிக்கை-

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் கொழும்புவர பல சிரமங்களை எதிர்கொள்வதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் பல்வேறு கெடுபிடிகளுக்கும் ஆளாகின்றனர். இக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர், இதனால் அக் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என அவ்வமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள்

இணையத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து இயங்கும் இணையத்தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய வகையிலும் இந்த சட்டம் அமையவுள்ளன. இலங்கையிலிருந்து இயங்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சட்ட வரைவுகளை மேற்கொள்ள குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் சரிதா ஹேரத் தெரிவித்துள்ளார். 67 இணையத்தளங்கள் மட்டுமே ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பதிவு செய்யாத இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலியான தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பதிவுக்கு உட்படுத்தப்படாத ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வதை விரும்பவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்- 

13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ஆம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்-அமைச்சர் தினேஷ்-

19 ஆவது திருத்தச் சட்டமூலம் இவ்வாரத்துக்குள் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 19 ஆவது தீருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஒவ்வானதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டமூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைப்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சரத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலீசாருக்கு எதிராக நடவடிக்கை-

இலஞ்சம் பெறல், ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 1,200 பொலீசாருக்கு எதிராக தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் உயர் பொலீஸ் அதிகாரிகள் சிலர் அடங்குவதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலீசாருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவு என பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன

News

Posted by plotenewseditor on 15 June 2013
Posted in செய்திகள் 

மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

parliamentஇலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

கவிஞர் வாலி  மருத்துவமனையில்

82 வயதான பிரபல பாடலாசிரியர்  கவிஞர் வாலிக்கு 2 நாட்களுக்கு முன் உடல்  நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் வாலி  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள  வாலி , எம். ஜி. ஆர். , சிவாஜி முதல் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை தொடர்ந்து சினிமாப் பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளருமான வாலி  திரைப்படங்களிலும் நடத்துள்ளார்.

பிரபாகரன் மதிவதனிக்கு அரச நியமனம்? .

யாழில் இன்று நடைபெற்ற வடமாகாணசபைத் திணைக்களங்களில் தொண்டர்களாக கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.
 குறித்த நபரை அழைத்தபோது அவரின் நியமனக் கடிதத்தில் உள்ள பெயரை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதத்தில் உள்ள பெயரை பார்க்குமாறு ஆளுநரிடம் காட்டினார்.
 குறித்த பெயரைப் பார்த்த ஆளுநர் மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் தங்களுக்குள் சிரித்ததை அவதானிக்கக் கூடியாதாக இருந்தது

 

News

Posted by plotenewseditor on 14 June 2013
Posted in செய்திகள் 

அதிகாரங்களை குறைப்பதற்கு ஆதரவளிக்க முடியாது: தெரிவுக்குழு குறித்து கூட்டமைப்பு கருத்து

tnaஅதிகாரங்கள் குறைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கோ, செயற்பாட்டுக்கோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒருபோதும் துணைபோகாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்பிதழ் எதுவும் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லையென்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் ஆளும்தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை சவாலுக்கு உட்படுத்தி அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் திருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி தெரிவுக்குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவும் போவதில்லை என்றார்.

13 ஆவது திருத்தத்தில் கைவைக்க விடமாட்டோம் : ராஜித உறுதி

13 ஆவது திருத்தம் தொடர்பில் நான் ஆரம்பத்தில் இருந்து எனது கொள்கையில் மாறவில்லை. அதற்கு எதிராக செயற்பட்டுவரும் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு நான் எதிர்;ப்புத் தெரிவிக்கின்றேன். 13 ஆவது திருத்தம் தொடர்பில் கைவைப்பதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளியோம் அதனை பாதுகாப்பதற்காக நான் எனது பதவியையும் இழக்கத் தயார் என தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமை கொடுக்கப்பட்டால் ஈழம் உருவாகுமென பேசுபவர்கள் தற்போது தங்களை மாகாண சபைகளின் ஆட்சியை தீர்மானிக்கும் ரிமோட்கொண்ட்றோல் என சொல்லுகின்றனர். மாகாண சபை முறைமையின் கீழ்; தமது வாழ்வாதாரத்தையும் அதன் சுகபோகத்தையும் அனுபவிப்பவர்கள் அதனை தமிழ் மக்களுக்கு வழங்கும் போது அகற்கு எதிராக கூக்குரல் இடுவதேன். இவ்வாறு பிரிவினைவாதம் பேசும் சிங்கள இனவாதிகளால் தான் தமிழ் இனவாதிகள் தோற்றம் பெற்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் இயல்பு நிலை பாதிப்பு ஆயிரக்கணக்கானோர் தொழிலிழப்பு, குளிரும் அதிகரிப்பு
  
 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினையடுத்து நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த ஒருவாரகாலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, மரம் முறிந்து வீழ்தல், போக்குவரத்து தடை, மின்சார தடை ஆகியவை நீடித்து வருகின்றன.
இதனால் நுவரெலியா, இராகலை, வலபனை, ஹட்டன், தலவாக்கலை, கொட்டக்கலை,நோர்வூட், இரத்தினபுரி, காவத்தை, இறக்குவாணை, பலாங்கொடை, கண்டி, பூஜாபிட்டிய, அக்குறணை, யட்டிநுவர, பஸ்பாகே, பாத்ஹெவாஹெட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
மேலும் காற்றோடு கூடிய பலத் மழையில் நோர்வூட் மேற்பிரிவு மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
அத்தோடு ஹட்டன் இலங்கை வங்கிக்கு அருகில் மரமொன்று சரிநபுது விழுந்தள்ளது. ஹட்டன் டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்துக்கு அருகில் மரக்கிளைகள் முறிந்து விழந்து சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இதேவேளை பலத்த மழை காரணமாக நீரேந்து பகுதிகளான மவுசாகலை, காசல்ட்ரீ, விமலசுரேந்திர, நோட்டன் ப்ரீஜ் உள்ளிட்ட நீர்த்தேத்தங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
இதேவேளை கண்டி மஹியாவையில் மரம் முறிந்து விழுந்ததில் எம். முருகையா (வயது 61) என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் கண்டியில் 35 குடும்பங்கள் வீடுகளை தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. ஹட்டன் தலவாக்கலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் பாடசாலைகளின் கூரைகள் பெரும்பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழை பெய்வதால் ஹட்டன், நுவரெலியா கல்விவலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
மேற்படி மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சார விநியோகப்பாதை பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியாவில்
உருளைக்கிழங்கு, மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாய காணிகளிலும், தோட்டங்களிலும் மழை நீர் நிரம்பி நிற்பதால் உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஏனைய மரக்கறி உற்பத்திகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நுவரெலியா விவசாய தோட்டங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்க்கதிநிலை அடைந்துள்ளனர்.

அத்தோடு ஒரு சில கிராம வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்தும் பல மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன. தொடர்ந்து மழைபெய்து வருவதால் வழமையைவிட குளிரும் அதிகரித்துள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்திலும் காலநிலை சீர்கேட்டினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகும். தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருப்பதால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விடயங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரியில் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மாதம்பை ஒரமுல்ல தோட்டத்தில் ஏற்பட்டளள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்களும் இருவாரங்களுக்கு 1610 ரூபா பெறுமதியான உணவு முத்திரைகளும் கொடக்கவௌ பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.ரஞ்சித் டி சொய்சா அவர்களினால் 9 குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரமுல்ல தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடும் மழை, மினி சூறாவளியால் 25 குடும்பங்களின் குடியிருப்புக்கள் பலத்த சேதமேற்பட்டது. இவர்கள் ஒரமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். 25 குடும்ங்களிலும் 115 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஏனைய குடும்பங்களுக்கு கிராமசேவகரின் தகவல்படி கூடாரம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மண்சரிவு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதால் ஒரமுல்ல தோட்டத்தில் 2 ஏக்கர் காணியை பெற்று வீடுகள் அமைத்துக்கொடுப்பதோடு 5 லட்சம் பெறுமதியான கூரைத்தகடுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொடக்காவல பிரதேச செயலாளர் பி.எஸ். ஜி. ருவன்சிறி தெரிவித்தார்.மேலும் 2 வாரங்களுக்கு 805 ரூபா வீதம் 1610 ரூபா பெறுமதியான உணவு முத்துpரைகள் கூட்டுறவு சங்க கடையில் பெற்றுக்கொள்வற்கு முத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கண்டி மஹியாவை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சுமார் 61 வயது நிரம்பிய எம்.முருகையா எம்பவரே இவ்வாறு அகால மர்திற்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யட்டிநுவர அக்குறணை பூஜாபிட்டிய தெல்கொட ஹத்கரலியத்த பஸ்பாகே பார்த். வாஹிவட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பாதிப்புள்ளாகியுள்ளதுடன் இவற்றைச் சேர்ந்த 109 பேர் பராமரிப்பிற்குட்பட்டுள்ளதாகவும் மற்றும் 03 பேர் காயங்களுகுள்ளாகியுள்ளதாகவும் 05 வீடுகள் முற்றாக சேதமடைந்து உள்ளதாகவும் சுமார் 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் அலகல்ல தங்வத்தை தெய்சும இலுக்குவத்தை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் சரிநபுது வீழ்ந்திருப்பதால் அவற்றை அகற்றும் அவசர பணிகள் முடுக்கி விடப்பட்டள்ளதாகவும் மேலும் அளவத்துகொடை கோணகலகல அக்குறனை தெல்கொடை ஆகிய பிரதேசங்களில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டள்ளதாகவும் கோவில் முதுன பிரதேசத்தில் வீடொன்றின் மீதும் மரம் ஒன்று சாய்ந்தால் வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது போன்று 05 வீடு முற்று முழுதாகவும் 30 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதோடு நேற்று முன்தினம் பிற்பகல் மஹியாவை பிரதேசத்தில் மரக்கிணையொன்று முறிந்து வீழ்ந்ததில் மரணமான நபர் தெல்தோட்டையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரணவீர தெரிவித்தார்.

புலிகளின் நிறுவனங்களை அவதானிக்கவும்; ஜேர்மனியிடம் ஜீ.எல். வலியுறுத்தல் .

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வேளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார். இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார். பெருமளவிலானோர் கலந்துகொண்ட வெளிநாட்டு கொள்கைக்கான ஜேர்மன் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணப்பட்ட புதிய போக்குகள் பற்றி பல பிரச்சினைகளை பிரஸ்தாபித்தார்.

அரசுடன் இணைவு?; மறுக்கிறார் வினோ எம்.பி

vinoதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் வினோ எம்.பி.க்கும் இடையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் கேட்டபோது, ‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போகிறேன் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது’ என்று குறிப்பிட்டார்.

‘மக்கள் எமக்கு வாக்களித்து, எம்மை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்களின் ஆணையை மீறி நாங்கள் ஒரு போதும் செயற்பட மாட்டோம்’ என்றும் அவர் தெரிவித்தார். ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் சந்திப்பது வழமையானது. அதிலும் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடற்தொழிலில் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடினேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘அமைச்சர் பசிலுடன் எமது ரெலோ அமைப்பு சார்பாக எமது அனைத்து கட்சி உறுப்பினர்களும் சந்தித்திருந்தோம். ஒரு காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் செயற்பட முடியாத காலகட்டத்திலும் அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். புகைப்படமொன்றினை வைத்துக்கொண்டு தவறான செய்திகள் வெளியாகியுள்ளமை கவலையளிக்கிறது’ என்று வினோ எம்.பி மேலும் தெரிவித்தார்.

News

Posted by plotenewseditor on 13 June 2013
Posted in செய்திகள் 

பொலீஸ் தாக்குதலை கண்டித்து நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்-

vavuniyaவவுனியா  வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், இன்றுகாலை நெடுங்கேணி பிரதேச விளையாட்டு விழா இடம்பெற இருந்த சமயம் மைதானத்தில் இருந்து தனது விடுதிக்கு சென்ற சமயம் பொலிஸார் மறித்தபோதிலும் அதனை அவதானிக்காத நிலையில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தனது விடுதிக்கு சென்றபோது பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் அவரை விடுத்திக்குள் வைத்து தாக்கியதுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக பொலிஸாரிடம் கலந்துரையாடுவதற்காக சென்ற பிரதேச செயலாளரை நிலையத்தின் பொறுப்பதிகாரி நீண்டநேரம் சந்திக்காது காத்திருக்க வைத்ததுடன் உதவி பிரதேச செயலாளரை போக்குவரத்து பொலிஸார் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். எனவே நாம் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்துள்ளனர். இதேவேளை, அதன்பின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம்-

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. குடிவரவு சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்துவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய இலங்கை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை வரையறுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது n;தாடர்பில் ஆஸியின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் சிங்கள குடிசன மதிப்பீடு-

jaffnaயாழ்.மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் யாழ்.மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களுமே சேகரிக்கப்படுகின்றன. இது தொடர்பான சுற்றுநிரூபம் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிராம சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம் தெரிந்த முதியவர்கள் இல்லை என்றும் கிராம சேவையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், பெருமளவான கிராம சேவையாளர்கள் 1983ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்றவர்களாக இருப்பதால் தகவல்களை திரட்டுவதில் தாம் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கிராம சேவையாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வடக்குத் தேர்தலை 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே நடத்த வேண்டும்-

யாழ் ஆயர்- வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 13ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இச் சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் வடமாகாணத் தேர்தலை நடத்தவேண்டும். தேர்தலை நடத்துகின்றபோது ஜனநாயக அதிகாரங்களை தமிழ் மக்களும் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தேர்தலை நடத்தத் திட்டமிடுவது பிழையான முடிவாகும் என அவுஸ்திரேலியாவின் தெற்காசிய அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மனிடம் யாழ் ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை-

நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹூலுகல்ல அறிவித்துள்ளார். இலங்கையில் அவை உரிய முறையில் குறித்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படாவிடின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பதிவு செய்யாமல் நாட்டுக்குச் சேவையாற்றும் தோரணையில் அரசைக் கவிழ்க்க அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்ள மோசடிகளில் ஈடுபட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட அரச சார்பற்ற நிறுவனங்கள் இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்பட மாட்டாது. எனவே, அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும். பதிவு செய்யாமல் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுலாக்கி அந்த நிறுவனங்கள் நாட்டில் இயங்குவதை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுகல்ல மேலும் தெரிவித்துள்ளார். 
 
10 வடபகுதி இளைஞர்கள் காத்தான்குடியில் கைது-

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற்பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 இளைஞர்களும் அவர்களுக்கு உதவிய ஒருவரும் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள மெத்தைப் பள்ளிவாயலுக்கு அருகிலிருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் யாவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, முருங்கன், கரவெட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிவந்ததாக தெரிவிக்கப்படும் வேன் தப்பிச்சென்றுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
சிறைச்சாலைகள் ஆணையாளரின் உயிருக்கு அச்சுறுத்தல்-

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம சிறைச்சாலை திணைக்களத்தில் பாரிய மாற்றங்களை செய்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களத்தில் இடம்பெற்று வந்த மோசடி நடவடிக்கைகளை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிராக சிலர் சூழ்ச்சி செய்வதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அவரை பதவியிலிருந்து நீக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி சங்கம் கூறியுள்ளது.
 
கொழும்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு-

மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின்கீழ் கிழக்குக்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கவென சர்வதேச முதலீட்டாளர் மாநாடொன்று கொழும்பில் நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் அஹ்மட்டின் எண்ணக் கருவுக்கு ஏற்ப எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரு தினங்கள் இப்பேரவை நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சு, பொருளாதார அமைச்சினதும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்புடன் இதனை ஏற்பாடு செய்கின்றது.

News

Posted by plotenewseditor on 12 June 2013
Posted in செய்திகள் 

12.06.2013

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர்மீது தாக்குதல்-

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர்மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலி, பலபிட்டிய மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்றுமாலை 4.30அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீன்பிடிக்குச் சென்று அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர். அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 
 
இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு-

13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடன் இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதுதாக கூறப்படுகிறது. இந்த அழைப்புக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடுத்த சில தினங்களில் புதுடெல்லி செல்ல உள்ளனர். கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சலமான் குர்ஷித், நிதியமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைமீது கூடுதல் அவதானம்-அமெரிக்கத் தூதுவர்

தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முடிவு செய்வதற்ளற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா செயலகத்தில், நேற்று செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னர்சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளார். இலங்கை அரசுடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை இணைந்து செயற்படும்படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது. தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிகக்கவனமாக அவதானித்து வருகிறது என ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
 
உலக அமைதியான நாடுகளில் இலங்கைக்கு பின்னடைவு-

2012ஆம் ஆண்டிற்கான உலகில் அமைதி நிலவும் நாடுகளை தரப்படுத்தி வெளியிடப்படும் உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 110வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 162 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தியா 141வது இடத்தைப் பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டைவிட இலங்கை ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. அரசியல், உள்நாட்டு முரண்பாடுகள், பயங்கரவாதம் உள்ளிட்ட பல விடயங்களை கணித்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுட்டெண்ணில் இலங்கை 2.3 புள்ளிகளைப் பெற்று 110ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதேவேளை தெற்காசியாவிலேயே மிக அமைதியான நாடாக பூட்டான் முன்னிலையில் உள்ளது. தெற்காசியாவில் அமைதியான நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தையும் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. 
 
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கூட்டமைப்புக்கு கடிதம்-

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆயர். இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக நடைபெற்ற கொடிய யுத்தத்தில் வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களாகிய நாம் சொல்லொனா துன்பங்களையும் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் அடைந்து ஏதுமற்ற ஏதிலிகளாய், இழப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை என்ற நிலையில் நடைப்பிணங்களாய் இருக்கின்றோம் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். எதிர்காலமே இருள் என்ற நிலையில் சிறையில் இருப்பதால் பொருளாதார ரீதியாக அடிமட்ட பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விரீதியான செலவுகள் மற்றும் வாழ்விடம் என்பவைகளுடன் சட்டத்தரணி தொடர்பான உதவிகள் என பல உதவிகள் தொடர்பாக நாம் பலமுறை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எதுவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் உங்களிடம் எதிர்பார்த்திருப்பது, அரசியல் கைதிகளினுடைய அடிப்படை விடயங்களான குடும்பநலன் மற்றும் சட்டரீதியான உதவிகளையேயாகும். இது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா? தமிழ் அரசியல் கைதிகளில், திருமணமானவர்களின் எண்ணிக்கை, உடல் பாதிப்பானவர்களின் விபரங்கள் உள்ளிட்ட தரவுகள் தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டனவா? இவ்விடயங்கள் தொடர்பில் தங்களின் காரியாலங்களில் முறையிடும்போது அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாததையிட்டு மிக வேதனையாகவுள்ளது. பல கைதிகளின், பிள்ளைகள் கல்வியை தொடர புத்தகம், அப்பியாச கொப்பிகள், எழுது கருவிகள் இன்றியும், ஒருவேலை உணவுக்கே கஸ்டப்படும் பொருளாதாரமற்ற நிலையில் கல்வியையும் இடைநிறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைபில் சட்டத்தரணிகள் பலர் இருந்தும் கூட ஏன்? எங்களுடைய பிள்ளைகளின் சட்டநடவடிக்கைக்கு உதவ முன்வரவில்லை? தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக காட்டுக்கின்ற அக்கறை இந்த விடயத்தில் கூட்டமைப்பிற்கு இல்லாமல் போனது ஏன்? கடந்தகால கசப்பான அரசியல் சூழ்நிலையே இன்று நீண்டகால சிறைவாழ்க்கைக்கான காரணமாகும். இதனை நீங்கள்கூட பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நலன்புரி குழுவொன்றை நியமிக்கவேண்டும் அந்த நலன்புரி குழுவுக்கு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கும். அந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்க வேண்டும்-பா.ஜ.க-

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என இந்திய மாநிலங்களவை பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரவிசங்கர் பிரசாத், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும், வடக்கு மாகாண கவுன்சிலில் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருந்தார். அதேபோன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசிய அவர், பாராளுமன்றத் தேர்வுக்குழு உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான அமைப்புகளில் பங்கேற்று தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இருதரப்பும் பிடிவாதத்தை தளர்த்தினால்தான், தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ஆஸி. சென்ற இலங்கை அகதிகள் படகை காணவில்லை

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.  இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது. தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
தாய்லாந்திருந்து வந்த இலங்கை வர்த்தகர் கைது-

தாய்லாந்திருந்து இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் அம்பாந்தோட்டை, மத்தல விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்க நகைகள் மற்றும் இரத்தின கல் எடுத்து வந்த நிலையில் இவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றுமுற்பகல் தாய்லாந்து, பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யூ.எல் 827 என்ற விமானத்தில் பயணித்த கொழும்பு வர்த்தகர் ஒருவரே சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரத்தினம் மற்றும் நகைகளின் பெறுமதி பற்றி தொடர்ந்தும் கணித்துக் கொண்டிருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில்-

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முதனிலை வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கணனி பயனாளர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய உலக தர வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது. 51 வீதமான கணனிப் பயனர்கள் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
காலநிலை குறித்த எச்சிரிக்கை நீடிப்பு-

மன்னார் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற் பரப்பில்  மீன்pடி மற்றும் கடற் தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 12 மணி நேரத்திற்கு இந்த அவதான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, காற்றுடனான மழை இன்றும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு பெய்த கடும் மழையினாலும் கடுங்காற்றினாலும் நுவரெலியா ஹற்றன் டிக்கோயா நகரசபைப் பகுதிகளில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த நகரசபையின் தவிசாளர்; ஏ.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கடும் மழை வெள்ளத்தினால் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததினால் டிக்கோயா நகரப்பகுதி குடியிருப்பாளர்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கடும் மழை பெய்வதால் டிக்கோயா நகரில் வெள்ளப்பாதிப்புக்கள் இடம் பெறக்கூடிய இடத்தில் வாழுகின்றவர்களும் அட்டன் காமினிபுரப் பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதால் இப்பகுதி குடியிருப்பாளர்களும் அவதானமாக செயற்படுமாறும் ஹற்றன் – டிக்கோயா நகர தவிசாளர் ஏ. நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, ஹற்றன், மஸ்கெலியா, நோர்வூட்;, பொகவந்தலாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
 
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகரிப்பு-

பலத்த காற்றுடனான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அவர்களுல் 54 பேர் மீனவர்கள் என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான நிதி மாவட்ட செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு அறிவித்துள்ளது.