கோட்டபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடைவிதிப்பு-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு இன்று காலை 10.33முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. காலி பிரதான நீதவான் நிலுபீலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகியோருக்கும் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் சரத் பொன்சேகா மற்றுமொரு வழக்கிலிருந்து விடுதலை-
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளரான சேனக்க ஹரிப்பிட்டிய என்பவரையும் குற்றமற்றவர் என இனங்கண்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையைத் தேடும் பணி தீவிரம்-
மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை நில்வல நீர்வீழ்ச்சியில் நீராடிகொண்டிருந்த போது காணாமல்போன பிரித்தானிய பிரஜையை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு பிரஜையொருவர், நில்வல நீர்வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பிரித்தானிய பிரஜையான டிமோனி ஜொல் ஜோன்(வயது23) என்பவரே காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் இருவர், வெளிநாட்டு பெண் பிரஜைகள் இருவர் மற்றும் இலங்கையரொருவருடன் சுற்றுலாவந்த குழுவினர். நில்வல நீர்வீழ்ச்சியில் குளித்துள்ளனர். இதன்போது நீர்வீழ்ச்சியில் மூழ்கி தத்தளித்த அமெரிக்க பிரஜையான பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டு இறத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, காணாமல்போன பிரித்தானிய பிரஜையை தேடும் பணிகளை தலாத்துஓயா கடற்படை முகாமின் உதவியுடன் இறத்தோட்டை மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலையங்களின் உயிர்காப்பு படையினர் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை பெண் ஊடகவியலாளர்களுக்கு பாலியல் தொல்லை-
இலங்கையில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்களில் 29 சதவீதமானோர் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள ஆய்வொன்றை அடிப்படையாக வைத்தே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆய்வை நடத்தியுள்ள தில்ருக்ஷி ஹந்துனெத்தி, 45 பெண் ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பில் தகவல்களை சேகரித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர்(28.8வீதம்) தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுத்துள்ளமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் இவ் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது இல்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சம்பவங்களின் போது சக ஊழியர்களிடமிருந்து போதியளவு ஒத்துழைப்பு கிடைப்பது இல்லையெனவும், மேலும் முறைப்பாடுகள் நிறுவனத்தினால் அலட்சியம் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது,
இந்திய பிரதமர் இலங்கை செல்லவேண்டாமென நாராயணசுவாமி வலியுறுத்தல்-
இந்திய மீனவர்கள் தொடர்பாக இலங்கை பிரதமரின் கருத்து வெளிப்பாட்டை காரணம் காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது விஜயத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி நுழையும் பட்சத்தில் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜிடம் தெரிவித்திருந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அயல் நாடுகளுடன் சிறந்த உறவை பேணுவதற்கு எண்ணம் கொண்டுள்ள தருணத்தில் இவ்வாறான கருத்துக்கள் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் சில அழுத்தங்கள் மற்றும் அதன் வலுவான செயற்பாடுகள் காரணமாக இலங்கை மக்களில் பலர் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இதுதவிர, இருதரப்பிலும் மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றபோது இடம்பெறுகின்ற கைதுகள் தொடர்பாகவும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் வி.நாராயணசுவாமி எடுத்துரைத்துள்ளார்.
விமல் வீரவங்சவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. சொத்துக்கள் மற்றும் ஊழல்கள் குறித்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்றுமுற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார், சொத்து மற்றும் ஊழல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய விமல் வீரவஞ்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களத்திற்கு சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு தொடரூந்து பாதையின் இரட்டை வழி-
வடக்கு தொடரூந்து பாதையின் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரட்டை தொடரூந்து பாதையை அமைப்பதற்கு தொடரூந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். குருணாகலையிலிருந்து, பொல்கஹாவெல வரையான பகுதியில் குறித்த இரட்டை தொடரூந்து பாதையை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வடக்கு தொடரூந்து பாதையை பயன்படுத்துவதன் காரணமாக பாரிய தொடரூந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தலைமன்னாருக்கான தொடரூந்து பாதை உட்பட வடக்கிற்கான பிரதான தொடரூந்து பாதையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அவசர நிலையாக கருதி இந்த வருடத்திலேயே இரட்டை தொடரூந்து பாதையை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை, மத்திய வங்கி மோசடி விசாரணை-
வெளிநாடுகள் பலவற்றுக்கான புதிய ராஜதந்திரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக 29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசாங்கத்தின் போது அரசியல் ஆதரவுடன் பலருக்கு ராஜதத்திர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறான நியமனங்கள் யாவும் இரத்து செய்யப்படும் என்றும் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு மூவர் அடங்கிய குழுவை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜையை தேடுதல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு-
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துகல பிரதேச கடற்கரையில் நீராடிகொண்டிருந்த இந்திய பிரஜையான அபிஷேக் ஜஸ்வான்ட் படேல்( வயது 20) என்பவரை காணவில்லை என்று ஏத்துகல சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் காணாமல் போன இவரை தேடும் நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகவும் சுற்றுலா பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரை உடனடியாக பதவி விலகுமாறு கோரி, பேராசிரியர்கள் உபவேந்தரின் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். உப-வேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அவர் இதுவரையிலும் பதவி விலகவில்லை என்றும் இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தது. பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகள் பலவற்றுக்கான புதிய ராஜதந்திரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக 29 புதிய ராஜதந்திரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னைய அரசாங்கத்தின்போது அரசியல் ஆதரவுடன் பலருக்கு ராஜநத்திர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறான நியமனங்களை ரத்து செய்து, புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் கூறியுள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தமது நாடு தயார் என ஜப்பான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மினோரு கியுஜி தெரிவித்துள்ளார். இன்றுகாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜப்பானின் சிறந்தவொரு நட்பு நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மினோரு கியுஜி ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவை சந்தித்துள்ளார். இதன்போது, ஊடக சுதந்திரம், இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருகோணமலை யான் ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி நேற்றிரவு 7.50 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரொட்டவௌ பகுதியைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. பலியானோரின் சடலங்கள் ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாச்சார ரீதியாக பின்னிப் பிணைந்தவை, என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த இராப்போசன விருந்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும். இது இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது எனவும் சுஷ்மா இதன்போது கூறியுள்ளார். இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றிகரமாக அமைந்ததாகவும் சுஷ்மா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை 10 மணியளவில் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே. 651 விமானத்தில் அவர் டுபாய் நோக்கிப் பயணித்து லண்டனுக்கு பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி, சாதாரண பயணிகள் விமானத்திலேயே பயணித்துள்ளார். அவருடன் 6 பிரதிநிதிகளும் லண்டன் நோக்கிப் பயணமாகியுள்ளனர். லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார். இதேவேளை அவர் லண்டனில் வைத்து, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் காணப்படுகின்ற இடைவெளிகளை தீர்ப்பதற்காகவே தாம் இலங்கை வந்திருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஓன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையிலும், இந்தியாவிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளது. இது இரண்டு நாடுகளின் ராஜதந்திர உறவிலும் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். நேற்றையதினம் இலங்கை வந்துள்ள சுஸ்மா சுவராஜ், ஜனாதிபதி உள்ளிட்ட பலரையும் சந்தித்திருந்தார். இன்று அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். மேலும் இன்றுமாலையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் மலையகத்தின் அரசியல் தலைவர்களையும் அவர் இன்றுமாலையில் சந்திக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரனுக்கு பிணை வழங்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கொழும்பு நீதவான், மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான், சட்டமா அதிபருக்கு பணித்தார். பொலிஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்கிற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஜெயக்குமாரியின் வீட்டில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு கருவியொன்று இருந்ததாகவும் புலனாய்வு பிரிவினர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இதுதொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், 14ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தியப் பிரதமரை வரவேற்கும் வகையில் விசேட வைபவமொன்று நடத்தப்படும். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படையினரால் பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். பின்னர், இந்தியப் பிரதமர், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளிக்கும் மதியபோசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். இலங்கை நாடாளுமன்றத்திலும்; இந்தியப் பிரதமர் சிறப்பு உரையாற்றுவார். இதேவேளை, இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதி காக்கும் படையினருக்காக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவார். இந்தியப்பிரதமர், அநுராதபுரம், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார். அநுராதபுரத்தின் மஹாபோதியை அவர் தரிசனம் செய்வார். யாழ்ப்பானத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்தியநிலையத்தை மக்களின் பாவனைக்காக கையளிப்பார். அதுமட்டுமன்றி இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளில் சில வீடுகளையும் அவர் பயனாளிகளிடம் கையளிப்பார். மன்னார் விஜயத்தின் போது, கொழும்பு – மதவாச்சி ஊடாக தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.
2005ம் ஆண்டு தாம் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், 2009ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பணத்தை வழங்கி, 2005ம் ஆண்டு தேர்தலில் வடக்கு மக்களை வாக்களிக்கவிடாமல் செய்தார். இதன் காரணமாகவே அவர் ஜனாதிபதியாக தெரிவானார். பணத்தை பெற்ற அமிர்காந்தன் என்பவர் இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார். இவ்வாறு வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க தடுக்காமல் இருந்திருந்தால், மகிந்த ராஜபக்ஷ என்ற ஜனாதிபதி இருந்திருக்கமாட்டார். தமிழ் மக்களும் அழிவுகளை சந்தித்திருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இறுதி யுத்த காலத்தில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. சீனாவும் பல ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. ஆகவே இரண்டு நாடுகளும் தங்களுக்கு முக்கியமானது. ஆனால் சீனா இலங்கை உறவினால் இந்திய – இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழக மீனவர்களின் பிரசன்னத்தால், வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் ஒருவரை சுட்டுக் கொல்வதற்கு தமக்கு சட்டத்தில் இடமிருக்கிறது.
வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (06.03.2015) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி, கலாசார நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் திரு.எஸ்.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உப பொலிஸ் உத்தியோகத்தர் திரு.ஆர்.எஸ்.குமார, வட மாகாணசபை உறுப்பினர் திரு.த.லிங்கநாதன், முன்னைநாள் வவுனியா நகரசபை உப தலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் திரு.க.சிவலிங்கம், உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. இ.சண்முகலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம், ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி. செ.அனுசியா, IDM Nation Campus (PVT) Ltd சார்பாக திரு.விமல், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வவவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலய கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு. எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு இன்று (06.03.2015) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் பௌதீக வளர்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும், தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர் திரு. எஸ்.வரதராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு. ம.சஞ்சீவன், செயலாளர் திரு. ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு. த.நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்ப்பட்டுவரும் சர்வதேச மகளிர் நாளினை முன்னிட்ட மகளிர் எழுச்சி வாரத்தின் எழுச்சி நாள் 5 – 05.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபை கலாச்சர மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது இவ் நிகழ்வின்போது வலிமேற்கு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், பிரதேச சபை உறுப்பினர் ந.பி.ராஜ்குமார், வலி மேற்கு பிரதச சபை உறுப்பினர் காங்கேயநாதன், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான செல்வி.சாருஜா சிவநேசன் அவ்களும் கலந்துசிறப்பித்தனர். நேற்றைய தினத்தின் கருப் பொருளாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச் சட்ட ஆலோசனை எனும் தலைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் தவிசாளர் உரையாற்றும்போது, இன்றைய சூழ்நிலையில் பல விடயங்களாலும் பாதிப்புற்ற நிலையில் தமது பிரச்சனைகளை உரிய முறையில் தீர்வு காணமுடியாத நிலையில் பல பெண்கள் காணப்படுகின்றனர். இவ் நிலையில் அவர்கள் பல தாக்கங்களுக்கும் உட்படும் நிலை காணப்படுகின்றது. இவ் நிலை தொடர்பில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இன்றைய இவ் எழுச்சி நாள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ் விடயம் தெடார்பில் வெகு விரைவில் எமது பிரதேசத்தில் பெண்களுக்கான இலவச சட்ட மையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கும் வெகுவிரைவில் நடைமுறைச் சட்டங்கள் தொடாடபில் விளக்கம் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

பழைய தவறுகளை இலங்கை மீண்டும் செய்யக்கூடாது என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹ_சைன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் அவர் சமர்ப்பித்த வருடாந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையில் தொடர்ச்சியாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கிலேயே அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. ஒரு தடவை மட்டுமே கிடைக்கின்ற இந்த வாய்ப்பை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கை அரசாங்கம் வழங்கிய பெருமளவு ஒத்துழைப்புக்கான சமிக்ஞை, புதிய தகவல்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே மேற்படி அறிக்கையை ஒத்திவைப்பதற்கான வேண்டுகோள் ஏற்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் செப்டெம்பரில் நடக்கவுள்ள அடுத்த அமர்வுக்கு முன்னர் தன்னையும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான அதிகாரிகளையும் இலங்கைக்கு அழைக்க இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதையும் அவர் பாராட்டியுள்ளார்.
புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான, பாலேந்திரன் ஜெயகுமாரியை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் பற்றி தெரியப்படுத்துமாறு நீதிமன்றத்தால், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஜெயக்குமாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரை விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுததுள்ளார். இதன்போது, அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் எழுத்து மூலமான ஆலோசனை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, சந்தேகநபரின் விடுதலைக்கான வாய்ப்புகள் பற்றி நீதிமன்றத்திற்கு அறியத் தருமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எலிசபெத் மகாராணியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 7ஆம் திகதி சனிக்கிழமை பிரித்தானியா பயணமாகவுள்ளார். நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானியா பயணிக்கும் ஜனாதிபதி மகாராணியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் .அதனையடுத்து இடம்பெறும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்வார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி 9ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது பிரித்தானிய விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோரை மீட்டல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகளை மீளளித்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும் என தெரிவித்தே அவர் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலைமுதல் இந்த சூழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீதியான சர்வதேச போர்க்குற்ற விசாரணை உடனடியாக வேண்டும், காணாமல் போனோரை கண்டுபிடித்து தர வேண்டும். இளம் விதவை பெண்களின் அவல கண்ணீருக்கு என்ன பதில், ஐ.நாவே எங்கள் கண்ணீரை அறியாயோ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு உண்ணாவிரதத்தினை முன்னெடுத்துள்ளனர். சூழற்சி முறையிலான இந்த உண்ணாவிரத போராட்டமானது எதிர்வரும் மகளீர் தினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரின் சொத்துக்கள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இன்று வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதைய அரசாங்க அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள்குழு ஒன்றினால் இந்த முறைப்பாடு மெற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார், முசலி பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேற்றியமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மூன்று மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்ட லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படை தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவுக்கு தன்னை மாற்றுமாறு கடந்த மாதம் 12ஆம் திகதி லெப்டினன் ராஜப்ஷ கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான அனுமதி கடற்படையினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவரை மீண்டும் கடற்படைத் தலைமையகத்துக்கு மாற்றம் செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக சில்வா தெரிவித்தார். அவரது சேவையின் தேவை அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவுடனான கூடுதல் நெருக்கமானது பொருளாதார உறவுகளுக்கான சமிக்ஞை என்று கருதும் வகையில் இலங்கை, பல உயர்மட்ட இந்திய கம்பனிகளை பெரிய செயற்றிட்டங்களில் குறிப்பாக உற்பத்தித்துறையில் கூட்டு முயற்சிகளில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளது. இந்திய பிரதமர் இலங்கை வரும்போது இவை அறிவிக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கு டயர் உற்பத்தி, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்ற உற்பத்திகள் பொருத்தமானவை என அர்ஜுன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


நேற்று (04.03.2015) புதன்கிழமை வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்படடு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் 4ம்நாள் எழுச்சி நாள் 4 முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. ந.பி.இராஜ்குமார் மற்றும் சங்கானை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி ச.நதியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நேற்றைய இவ் எழுச்சி நாள் நிகழ்வானது பிரதேச ரீதியில் விதவைப் பெண்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் பிரதேச ரீதியில் விதவைகள் அமைப்பபை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்ததது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றும்போது,