நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கும் கட்சிகள்
நாடாளுமன்றத் தேர்தலில் வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.
யாழ்ப்பாணம், வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் வெள்ளியன்று கையளிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான 8 பேர் இம்முறை யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். கடந்த முறை தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் வடமாகாண சபையின் உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் இம்முறை யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார். Read more