sadfசீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேவேளை, அம்பலன்கொட ஊருவத்தை பகுதியில் வசித்த 39 வயதான ஒருவரும், அங்குறல பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சடலங்கள் பலப்பிட்டிய மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மரண விசாரணைகள் இன்று இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டம் ஹற்றன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன் டிலரி தோட்டப் பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதினால் அந்த பிரதேசத்தில் உள்ள எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் வசித்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 47 பேர் சென். ஜோன் டிலரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தினால் கிராம சேவகர்கள் ஊடாக சமைத்த உணவு வழங்குவதற்கும் அடிப்படைகளை வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மலையத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவே தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் தாங்களுக்கு அந்த வீடுகளில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிவாரணம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தங்களுக்கு வீடுகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்தால் போதுமானது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கடும் மழை காரணமாக எட்டு வீடுகள் தாழிறக்கத்திற்கு உள்ளாகி சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

இதேவேளை, நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் நீர்தேக்கத்தை அண்மித்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது மேலும், மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது.