39 இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் குறித்த நியமனங்கள் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.பி.ஜி குமாரசிறியும், சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜி.சி.கருணாரத்னவும், மருந்து உற்பத்தி,விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.