இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என்றும் சீனா நம்புவதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் திங்கட்கிழமை (05) கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்றும் இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் நெருக்கடி மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதோடு, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.