முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1,303வது நாளாகவும் சுழற்சி முறையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் சர்வதேச சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்திருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க கட்டிடத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.