வரவுசெலவு திட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்-

parliamentதேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர். 13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம்.கே.டி.எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார, செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.