தாஜூதீன் கொலை விவகாரம், கெப்டன் திஸ்ஸ தப்பிச்செல்ல முயற்சி-

tajudeenபிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னிருந்த நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கும் கடற்படைப் பிரிவிவைச் சேர்ந்த அதிகாரியொருவரின் துணை, இந்த கெப்டன் திஸ்ஸவுக்கு இருப்பது, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டநாள் ஆதரவாளரும் வாகன சாரதியுமான இவருக்கு, பிரயாணத்தடையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கெனவே பெற்றிருந்தது. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கெப்டன் திஸ்ஸவுக்கு, கொழும்பில் 5 வீடுகள் உள்ளதாகவும் அவர் எங்கிருக்கின்றார் என்பது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பது அடையாளம் காணப்பட்டு இருப்பினும், அவர்களைக் கைதுசெய்வதற்கு சிறிது அவகாசம் தேவை என்று, விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தாஜூதீன் தொடர்புடைய வழக்கு, ஜனவரி 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பதாக சந்தேக நபர்கள் அறுவரும் கைது செய்யப்படுவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.