போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள்மீது துப்பாக்கிப் பிரயோகம்-

shootதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர்மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு கண்டி வீதியில், பேலியகொடை, புலுகஹ சந்தியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் லொறி ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விட்டு செல்லும்போது, பிரிதொரு நபரினால் மோட்டார் வாகனத்தில் இருந்தவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களை அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீதும் அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதனால் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு-

passportபுதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன. வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது. இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500ரூபா பணமே அறவிடப்பட்டது. மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் அறவிடப்பட்ட 2,500 ஷரூபா கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் கடவுச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கராத்தே சம்பியன் படுகொலை விடயம், மூவர் விடுதலை-

vasantha soysaஅநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 35 பேரில், மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 35 பேரும், அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது நீதவான் உமேஷ் கலன்சூரியவே மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். மூவரை தவிர ஏனைய சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பயணச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போருக்கு தண்டம் அதிகரிப்பு-

madu trainபயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் ஆலோசனைக்கமைவாகவே இந்நடவடிக்கை 2016 ஜனவரி முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொவர் தெரிவித்துள்ளார். பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தற்போது 2500 ரூபா அறவிடப்படுவதாகவும் இது ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மிதிபலகை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் பயணிப்போருக்கு எதிராகவும் ரயில்வே திணைக்களம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை மிதிபலகையில் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்திருப்பதாகவும் ராகம ரயில் நிலையத்திலேயே அதிகமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

பிரகீத் விவகாரம்; பெண் ஊடகவியலாளரிடம் விசாரணை-

prageeth ekneligodaபிரபல ஊடகவியலார் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான செய்தியை வெளியிட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த செய்தியை வழங்கிய புலனாய்வு உத்தியோகத்தர் யார் என்பது குறித்து, நேற்று இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்டு வரும் நிலையில், அது குறித்து இரகசிய தகவல்களை வெளியிட்டதாக குறித்த ஊடகவியலாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் கடத்தப்பட்டு இராணுவ முகாமொன்றில் கையளிக்கப்பட்டு, அதன் பின்னர் கொலைசெய்து கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.