Header image alt text

துயர் பகிர்வோம் – அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்கள்-

singam 01

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறு பராயத்திலிருந்தே மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள் நேற்று இரவு (18.04.2016) மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த சிங்கம் அவர்கள், தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

1983 இனக் கலவரத்தினைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் இன்றுவரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கின் வளர்ச்சியிலும், அமைதியிலும் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டிருந்த அவர், தன்னலமற்ற சேவையினை மக்களுக்கு ஆற்றுவதிலே நிகரற்று விளங்கியவர் என்பதோடு, சுகயீனங்களுக்கு மத்தியிலும் கூட கழகத்தின் பணிகளிலே மரணிக்கும் வரையில் இடையறாது தனது பங்களிப்பை செலுத்தி வந்தார்.

கடந்த முப்பது வருட அரசியல் சூழ்நிலைகளில் பல்வேறுவகையான நெருக்குவாரங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்தபோதிலும் மக்களுக்கான தனது பணியை அவர் ஒருபோதும் மறந்தவருமல்ல, மறுத்தவருமல்ல.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், தோழர்கள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆறாத் துயருடனும், கனத்த இதயத்துடனும்
எமது இதய அஞ்சலிகளைச் செலுத்தி விடை தருகின்றோம்…
சென்று வா தோழா!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்ள் விடுதலை (DPLF)

plote

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 19 April 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்

benedict thanabalasingam 18.04 (2)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு புதுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்கள் (18.04.2016) திங்கட்கிழமை மட்டக்களப்பில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த சிங்கம் அவர்கள், தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

1983ல் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் இன்றுவரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கே ஒரு பேரழிப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

plote

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் அவரது புதூர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு இன்றுமாலை 4.00மணியளவில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்பு : (0779818459 – கேசவன்)

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்- 

wqeweமட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் வீட்டின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் மாநகரசபை ஊழியர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 அளவில் மட்டக்களப்பு மாநகரசபையில் இருந்து காந்தி பூங்கா வரையில் அமைதியான முறையில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், காந்தி பூங்காவில் இருந்து மீண்டும் மாநகரசபை வரையில் பேரணியாக சென்றனர். “தன்னலமற்ற பொதுச்சேவைக்கு கிடைத்த வெகுமதி வன்முறையா?, இன்று மாநகர ஆணையாளருக்கு நாளை?, மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நடந்த அனர்த்தத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்து..” உட்பட பல சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். கடந்த 09ம் திகதியிரவு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களுக்கு 24ம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம்-

graduateபுதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை இணையம் மற்றும் எழுத்து மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு முடியும். கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதேவேளை, புதிய கல்வி ஆண்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அனுமதிப் பத்திர கையேடு எதிர்வரும் 22ம் திகதி வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையூடான கடத்தல்களை தடுக்க விசேட பயிற்சி-

navyசர்வதேச கடல் எல்லையூடாக முன்னெடுக்கப்படும் கடத்தல்களை நிறுத்துவதற்கு கடற்படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை உறுப்பினர்களை பயிற்சியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்வதேச கடல் எல்லையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான இரண்டு யுத்த கப்பல்கள் அடுத்த வருடம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் கடற்படை தளபதி கூறியுள்ளார். இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் முன்னெடுக்கப்படும் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் உட்பட உறுப்பினர்களின் முதலாவது சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு)
41c52d87-fe6e-42c4-afad-ec8c4a7b6078சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரமல்லாது அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்குமான கூட்டம் நேற்றையதினம் (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகி சுமார் மாலை 6.00 மணிவரை மிகவும் ஆரோக்கியமாகவும், சுமுகமாகவும் நடைபெற்றது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் அமைதி வணக்கத்துடன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்ததோடு, இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்ட நேர ஒழுங்குகள், கூட்டத்திற்காக முன்கூட்டி அறிவிக்கப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்கள், கடந்த 28.03.2016அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டம் மற்றும் கடந்த 30.03.2016 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டம் என்பவற்றின் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 

Read more

அமரர் மண்டலநாயகம் விதானையாரின் ஞாபகார்த்தமாக திருக்கோவிற் பாமாலை வெளியீடு-(படங்கள் இணைப்பு)-

15.04.2016 Chunnakam (5)அமரர் மண்டலநாயகம் விதானையார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய குடும்பத்தினர் திருக்கோவிற் பாமாலை என்ற நூலினை கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று யாழ். சுன்னாகம் அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் தேவஸ்தான மணிமண்டபத்தில் வைத்து வெளியிட்டுள்ளனர். இதில் ஆலயங்களில் பாடுவதற்குத் தேவையான எல்லா தேவாரங்களும் பாமாலையாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விலே புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், நல்லை ஆதீனம், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு திருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ நிதி அன்பளிப்பு-

etrtஅல்லாரை வடக்கு கொடிகாமத்தில் வசித்து வரும் அனுசியா என்பவரது குடும்பம் வாழ்க்கையில் எண்ண முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனார். கடந்த 2014ம் ஆண்டு இடம்பெற்ற சமூக வன்முறையின்போது தனது அண்ணாவையும் இழந்து தவிக்கும் அனுசியாவின் தாய் ஒர் நரம்புத் தளர்ச்சி நோயாளி. மகனின் இழப்பினை தாங்க முடியாத தகப்பன் ஒர் மனநோயாளி இதற்கு மேல் அவரது தங்கை அயினா நான்கு வயதிலேயே ஒரு நாளைக்கு இரு ஊசி போடும் அளவிற்கு நீரிழிவு நோயாளி.

இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் அனுசியா உயர்தரத்தில் சித்தி பெற்று மட்டகளப்பு விபுலானந்த கல்வியியற் கல்லூரிக்கு நேர்முகத் தேர்வு வரை சென்றுள்ளார். தாய் தகப்பன் மற்றும் தங்கை குடும்பத்தில் உள்ள மூவருமே நோயாளிகள் மாதாந்தம் கிளினிக் மற்றும் தங்கைக்கு ஒவ்வொரு நாளும் இரு ஊசி என்ற நிலையில் அனுசியாவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவதியுற்று வரும் நிலையில் எமது சங்கத்தின் செயற்பாடுகளை ஊடகங்களினூடாக அறிந்த அனுசியா மருத்துவத்திற்கான உதவியைக் கோரியிருந்தார். இவரின் குடும்ப நிலை அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் நிலை அறிந்தும் லினோஸ்சின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் குடும்பத்திற்கான மருத்துவச் செலவிற்கு 20,000 நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

தாயகம் திரும்பியோர் பிரஜாவுரிமை பெறுவதில் சிக்கல்-

refugeesஇந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய பலர் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பி மீள்குடியேறியுள்ளவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பலர் இந்தியாவில் குடியேறி பல வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது, அரசாங்கத்தின் அறிவித்தலை ஏற்று நாடு திரும்புகின்றனர். இவ்வாறு நாடு திரும்புபவர்களில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அங்கு திருமணம் செய்தவர்களாகவும் உள்ளனர். நாடு திரும்பும் இவர்களிடம் இலங்கை பிரஜாவுரிமையை பெற அரசு பல்வேறு தகவல்களை கோருவதால், அதனை வழங்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர். அத்துடன், பிரஜாவுரிமையைப் பெற 25,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தாம் தொழில் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், அடையாள அட்டை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் பிரஜாவுரிமையை பெற இந்த அரசாங்கம் கையாளப்படும் வழிமுறைகளை இலகுபடுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் இலங்கையர் அங்கு தங்கி இருந்தமைக்கான பதிவுகளின் அசல் பிரதிகள் வேண்டுமென கோரப்படுகின்றது. ஆனால் அங்கிருந்து வரும்போது அசல் பிரதிகள் மீளப்பெறப்பட்டு நகல் பிரதிகளை மாத்திரமே கொண்டுவர அனுமதிக்கப்படுகின்றது.

மன்னார் விபத்தில் பெந்தகொஸ்து சபை போதகர் உயிரிழப்பு-

tryyyயாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் விபத்துக்களானதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபையின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, இலங்கை பெந்தகோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் மன்னார் தள்ளாடி பிரதேசத்தில் காணப்படும் விமானப்படை தளத்திலேயே விபத்துக்ககுள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த விபத்தின் போது, தாவீது ராஜா(வயது-58) என்றே போதகரே உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பெந்தகோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான போதகர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதன்போது, மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்-

courts (1)கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நீதவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதவானாக ஏ.ஏ. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண நீதவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவராவார்.

தெல்லிப்பளையில் அமரர் சிவமகாராஜா அவர்களின் உருவச்சிலை திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

sivamaharajah 16.04 (8)முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னைநாள் தலைவருமான அமரர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலை தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நேற்று (16.04.2016) சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவர் உமாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்த்தின் தலைவர் ஆறுதிருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

வியாபாரிமூலை கலைமணியின் கல்விக் கௌரவிப்பு விழா-2016-(படங்கள் இணைப்பு)
14.04.2016 kalaimani kauravippu vizha (9)பாடநெறிகளில் விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியரைக் கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் மற்றும் விக்னேஸ்வரா படிப்பகத்தில் கலைமணி சனசமூக நிலையத் தலைவர் திரு. க.கதிரமலை (முன்னைநாள் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் கடந்த 14.04.2016 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. சுகிர்தன் (முன்னைநாள் உயர்தொழில்நுட்பவியல் நிறுவன முன்னாள் பணிப்பாளர்), திரு. பா.கஜதீபன் (வட மாகாணசபை உறுப்பினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடநெறிகளிலே விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more

மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும்-(படங்கள் இணைப்பு)

20160417_170317மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) அவர்களால் மா.பா.சி கேட்டவை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலறிமுகம் சமூக செயற்பாட்டாளர் எம். மதன்ராஜ் அவர்கள், நூலாய்வு ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராசா அவர்கள்,

கருத்துரை பதிப்பாசிரியர் ந.இரவீந்திரன் மற்றும் தினக்குரல் முன்னாள் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் ஆகியோர், ஏற்புரை நூலாசிரியர் மா.பாலசிங்கம் (மா.பா.சி) அவர்கள், நன்றியுரையினை புதிய பண்பாட்டுத் தள இணைப்பாளர் ஜெ.லெனின் மதிவானம் அவர்கள் நிகழ்த்தினார்.
Read more

எக்வடோர் நிலநடுக்கத்தில் சுமார் 77 பேர் உயிரிழப்பு-

asasasaதென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 600 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார்.

தற்போது எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு கரையோரம் உள்ள முசீன் நகருக்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்துள்ளது. பல்லுயிர் வாழும் காலபோகஸ{ம் எக்வடோரில் உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து விமானநிலைய கோபுரம் உட்பட ஏராளமான கட்டடங்களும், மேம்பாலங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.