திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று மேற்கொள்ளபட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய கம்பஹா – திவுலுப்பிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய, பெண்ணொருவருக்கு நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது. இதனையடுத்து அவர் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் 69 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய பிசிஆர் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மகன்கள் இருவருடைய பிசிஆர் பரிசோதனைகளும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் 400ற்கும் அதிகமானவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.