உள்ளூராட்சிமன்றங்களைக் கலைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே காணப்படுவதாக தெரிவிக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தன, எவ்வாறாயினும் மார்ச் 18ஆம் திகதியுடன் தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் காலம் நிறைவடைவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி எம்.பி முஜிபூர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முஜிபூர் ரஹ்மான், உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் முடிவடையும் காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியாகும். இதனால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சபை உறுப்பினர்களாகவே போட்டியிடும் நிலை ஏற்படுகின்றது. இது அநீதியாகும் என்றார்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படாமல் இதுவரையில் தேர்தல் நடத்தப்பட்டதில்லை. எனவே இது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் பிரதமருமான தினேஸ் குணவர்தனவின் நிலைப்பாடு என்ன எனவும் வினவினார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திகதி தொடர்பான வர்த்தமானி வெளியிட்டிருக்கின்றது. இன்று முதல் (நேற்று ) அதற்காக கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகின்றது. இதன் நடைமுறைக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களின் காலம் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானிக்கின்றது.

ஆனால், தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் மார்ச் மாதம் 18ஆம் திகதியே முடிவடைகின்றது. அதனால் தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே இதுதொடர்பில் யாரும் சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றார்.