தேசிய பாதுகாப்புக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது-இராணுவத்தளபதி-

defenceதேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும், புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மாலைத்தீவுக்கு விஜயம்-

presidentமாலைதீவின் 50ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் மாலைத்தீவுக்கு பயணமாகியுள்ளனர். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், மாலைதீவு ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபடுவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-

earth quakeஇந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என இந்தோனேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் கடல்பகுதியில் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.

தேர்தல் சட்டங்களை மீறிய 175 பேர் கைது-

election violenceதேர்தல் சட்டங்களை மீறிய 175 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறிய 120 சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்ட சுமார் 33 வாகனங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

எதிர்வரும் தேர்தல் இங்கிலாந்து தேர்தலுக்கு ஒப்பானது-பிரதமர்-

maithri & ranilஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இங்கிலாந்தில் இடம்பெறும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானங்களை எடுக்கின்றார். ஜனாதிபதி எந்தவித தீர்மானங்களையும் எடுக்கமாட்டார். தேர்தல்கள் ஆணையாளர் சட்டங்களை செயற்படுத்துகின்றார். பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும். தேர்தல் கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தாக்கப்படமாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் எங்கும் சென்று பிரச்சினைகளின்றி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடலாம். ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரலாம்.

இவையே நல்லாட்சியின் பிரதிபலன்கள் என சுட்டிக்காட்ட முடியும் என ஹங்குரான்கெத்தையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது பிரதமர் தெரிவித்துள்ளார். அதேநேரம், சுதந்திர கூட்டமைப்பினருக்கும், ராஜபக்ஷ தரப்பினருக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட அரச வாகனங்கள் இல்லை. சமுர்த்தி அதிகாரிகளோ, காவல்துறையினரோ தேர்தலில் ஈடுபடும் கட்சிகளின் சார்பில் பணியாற்ற முடியாது. அவர்கள் சட்டத்திற்கு சார்பாகவும், அதற்கு மதிப்பளித்தும் பணியாற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.