Header image alt text

கிரீஸில் படகு மூழ்கி குழந்தைகள் உட்பட 22பேர் பலி-

greezeஐரோப்பாவில் தஞ்சம் கோரி கடல் மார்க்கமாக கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதிகளின் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 144 பேர் காப்பாற்றப்பட்டதாக கிரீஸின் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகுமூலம் காலிம்னோஸ் தீவு நோக்கி இவர்கள் பயணித்துள்ளனர். இதேவேளை, ரோட்ஸ் அருகே கடலில் மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் சிலர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். ஆக்கிரமிப்பு பகுதியில் அரச படைகள் முன்னெடுக்கும் கடும் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதன்போது பலர் நடுக்கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் போராட்டம்-

88யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற முன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இன்று யாழ் ஹொகதீன் பள்ளியில் நடைபெற்ற விஷேட தொழுகையினை தொடர்ந்து இவர்கள் கவனீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. .

சுங்க அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்-

customs125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்க அதிகாரிகளான சுஜீவ பராகிரம, ஜகத் குணதிலக்க மற்றும் எம்.டீ.யூ.ஜி.பெரேரா ஆகியோரே இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த 15ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கைப் பெண் தெரிவு-

tamil girl australiaஅவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளார். முதன் முறையாக மோர்லன்ட் நகரில் சமந்தா ரட்ணத்தின் பசுமைக் கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பிறந்த சமந்தா ரட்ணம் 1987 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பா மற்றும் கனடாவில் வசித்து பின்னர் 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.

மட்டக்களப்பு மற்றும் திருமலையில் வெடிபொருட்கள் மீட்பு–

bombமட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக கல்குடாவில் பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை முன்னெடுத்தனர். இதன்போது மர்மப்பொருள் ஒன்று தென்படுவதையடுத்து அருகிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்கினர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து ஆட்லறி 122 மோட்டார் குண்டை கைப்பற்றினர். பின்னர் குண்டு செயழிக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேவேளை, திருகோணமலை – வில்கம் விகார பிரதேசத்தில் பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர். நேற்றுப்பகல் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர். வெடிபொருட்களுடன் சந்தேகநபர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். உயர் வெடி மருந்து 1.5 கிலோ கிராம், டெட்டனேற்றர் 182, டெட்டனேற்றர் வயர் 1820 அடிகள். அமோனியம் நைற்றிஜன் 101 கிலோ என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து விசாரணைக்கு பணிப்பு-

arpattamகொழும்பு வோட் பிளேஸில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின்போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரியோகம் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து பிரதமர் அறிக்கையொன்றை கோரியுள்ளார். இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமைச்சருடன், பிரதமர் நேற்று விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது கைதான 2 பிக்கு மாணவர்கள் உட்பட 39 பேரும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வணிகவியல் பாடநெறிக்கு சமமான அங்கீகாரத்தை தமது பாடநெறிக்கும் வழங்குமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.