Posted by plotenewseditor on 26 July 2016
Posted in செய்திகள்
வடக்கில் குளங்களை அபிவிருத்தி செய்ய ஜப்பான் உதவி-
மகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியகபூர்வமாக விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர், வடக்கில் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படும் குளங்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இச்சந்திப்பில் மாகாண சபையின் உறுப்பினர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு செயற்றிட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுவிஸ் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது-சுவிஸ் தூதுவர்-
சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைப்போட்டு ஒட்ட முடியாது. ஆனால் அதிகார பகிர்வை, ஓரு நாட்டை பிளவுபடுவதும் அலகாக கருத்துப்பட கூறுவது தவறானது. உலகில் ஐம்பதற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி நாடாக அதிகார பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருதுவதில்லை என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்குன் தெரிவித்தார். போரின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால் கடந்த கால மோதல்களுக்கு தீர்வுகாண அவை போதுமானதல்ல. மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதுவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தற்போதுள்ள இலக்குகளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கும் – சுவிஸர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் இவற்றை கூறியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவம் நிறுத்தப்படாது-பாதுகாப்புச் செயலர்-
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்ற நிலையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பிற்காக, இராணுவத்தினரை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலைமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளை வாசிக்க……. Read more