Posted by plotenewseditor on 30 July 2016
Posted in செய்திகள்
ஆணைக்குழு விசாரணைகளில் கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை-
காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படாததுடன், எமது கவனத்தை திசைதிருப்பும் முனைப்பிலேயே அவர்கள் செயற்பட்டனர் என காணாமல்போன இளைஞனின் தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வலய செயலணி இன்று மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த தாய் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இன்னும் வீடு திரும்பவில்லை. கடந்த காலங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் நிலவியமையால் இந்த உண்மையை வெளியிட தயங்கினேன். அதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றபோது எமது கருத்துக்களை வழங்க உரியநேரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணைகளை மேற்கொண்டவர்கள், வாழ்வாதாரத்திற்கு ஆடு, மாடு தருவதாகவும், நட்டஈடு தருவதாகவும் கூறி எங்களுடைய கவனத்தை திசை திருப்புவதிலேயே முனைப்பாக செயல்பட்டனர். கடந்த 2008, 2009ம் ஆண்டுகளில் விசாரணைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் எனது மகன் அவ்வாறு கொல்லப்படவில்லை. எனது மகன் எங்கேயோ ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போதுவரை உயிரோடு இருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் வடக்கிலேயே அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தல்-
காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை களை மேற்கொள்ளும் அலுவலகம் கொழும்பில் அமைக்க கூடாது. அது வடக்கில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றிலேயே அமைக்கப்பட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணி இன்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியானது, நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசிப்பதற்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும், காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக பல வருடங்களாக நீதிமன்றங்களில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் துரிதப்ப டுத்தப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து சர்வதேசத்தின் தலையீட்டுடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, இவர்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதி குழுவினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும் காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்க முடியாது எனவும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவிக்கக்பட்டதோடு சொத்து இழப்புகளுக்கு மாத்திரமே இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க…. Read more